தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும்
பள்ளிகள், நாளை திட்டமிட்டபடி திறக்கப்படுகின்றன.தமிழகத்தில், அரசு
மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆண்டு இறுதி தேர்வுகள் முடிந்து,
ஏப்., 22ம் தேதி, கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. அரசு தொடக்க
பள்ளிகளுக்கு, மே 1 முதல் விடுமுறை விடப்பட்டது. விடுமுறை முடிந்து, நாளை
பள்ளிகள் திறக்கப்படும் என, அறிவிக்கப்பட்டு இருந்தது.
கோடை வெயில் வறுத்தெடுத்ததால், பள்ளிகள்
திறப்பை தள்ளிவைக்க வேண்டும் என, கல்வியாளர்கள், பெற்றோர், மாணவர்
அமைப்பினர் வலியுறுத்தினர். இதனால், பள்ளி திறப்பு தள்ளிப்போகும் என,
எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பள்ளிக்கல்வி துறை மறுத்து விட்டது.
இதனால், திட்டமிட்டபடி, அரசு, அரசு உதவி
பெறும் பள்ளிகள், நாளை திறக்கப்படுகின்றன. அன்றைய தினமே, இலவச பாட
புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் மற்றும் சீருடைகளை வழங்க, ஆசிரியர்கள்
அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். பல மெட்ரிக் பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன்
பள்ளிகள், ஜூன் 6; சி.பி.எஸ்.இ., பள்ளிகள், ஜூன் 8ம் தேதியும் திறக்கப்பட
உள்ளன.
தள்ளிவைக்க கோரிக்கை:இதற்கிடையில்,
தமிழ்நாடு தொடக்க, நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில்,
முதல்வர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
சங்க பொதுச் செயலர் சேகர் தலைமையில்,
நிர்வாகிகள் கொடுத்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:தமிழகத்தில், வெயிலின்
தாக்கம் அதிகமாக உள்ளது. மாணவர்கள், ஜூன் 1ல் பள்ளிக்கு வருவது சிரமமாக
இருக்கும். எனவே, ஜூன், 10ம் தேதி வரை, பள்ளி திறப்பை தள்ளிவைக்க வேண்டும்.
அனைத்து நடுநிலைப் பள்ளிகளிலும், நேரடியாக,
ஒன்றாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை, பாடம் நடத்த நியமிக்கப்பட்ட,
பட்டதாரி ஆசிரியர்கள், எம்.பில்., பட்டம் பெற்றிருந்தால், ஒரு ஊக்க ஊதிய
உயர்வு வழங்க வேண்டும். அதை வழங்க, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு
உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.