பிளஸ் 2 தேர்வு முடிவை முன்னதாக வெளியிட்ட அதிகாரி 'சஸ்பெண்ட்'

கிருஷ்ணகிரியில், பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவை முன்னதாக வெளியிட்ட, மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.தமிழகம் முழுவதும், கடந்த, 17ம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாயின. காலை 10:31 மணிக்கு தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என, அரசு தேர்வுத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

தேர்வு முடிவுகளை வாங்குவதற்காக, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன், 17ம் தேதி காலை, 8:00 மணி முதல் பத்திரிகையாளர்கள் குவிய துவங்கினர்.தேர்வு முடிவுக்காக அனைவரும் காத்திருந்த நிலையில், காலை, 9:15 மணிக்கே, கிருஷ்ணகிரி அடுத்த ஊத்தங்கரையில் உள்ள ஒரு தனியார் பள்ளி மாணவ, மாணவியர் மாநில அளவில் மதிப்பெண்கள் பெற்றுள்ளதாக, பெயர் மற்றும் மதிப்பெண் விவரத்துடன், 'டிவி' சேனல்களில் செய்தி வெளியானது.
தேர்வுத்துறை அறிவுறுத்தியிருந்த நேரத்திற்கு முன், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேர்வு முடிவுகள் வெளியாயின.

இது குறித்து விசாரணை நடத்த, பள்ளிக்கல்வி துறை, கிருஷ்ணகிரி முதன்மை கல்வி அலுவலருக்கு உத்தரவிட்டு இருந்தது.கல்வித்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன், முன்கூட்டியே தேர்வு முடிவுகளை வெளியிட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவரை சஸ்பெண்ட் செய்து, பள்ளிக்கல்வி துறை மேல்நிலை கல்வி இணை இயக்குனர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.