பிளஸ்-2 விடைத்தாள் நகல் பெறவும், மறு கூட்டலுக்கும் 17 மற்றும் 18-ந் தேதிகளில் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

பிளஸ்-2 விடைத்தாள் நகல்பெறவும், மறு கூட்டலுக்கும் விண்ணப்பிக்கலாம் அரசு தேர்வுத்துறை இயக்குனர் அறிவிப்பு 
பிளஸ்-2 விடைத்தாள் நகல் பெறவும், மறு கூட்டலுக்கும் 17 மற்றும் 18-ந் தேதிகளில் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார். அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மறுமதிப்பீடு 
பிளஸ்-2 விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் 17, 18 ஆகிய தேதிகளில் விண்ணப்பிக்கலாம்.தேர்வர்கள் தங்களுக்கு விடைத்தாளின் நகல் தேவையா அல்லது மதிப்பெண் மறுகூட்டல் செய்ய வேண்டுமா என்பதை முன்னரே தெளிவாக முடிவு செய்து கொண்டு அதன் பின்னர் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விடைத்தாளின் நகல் பெற்றவர்கள் மட்டுமே விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி பின்னர் விண்ணப்பிக்க இயலும். விடைத்தாளின் நகல் கோரி விண்ணப்பிப்போர், அதே பாடத்திற்கு மதிப்பெண் மறுகூட்டலுக்கு தற்போது விண்ணப்பிக்கக்கூடாது. விடைத்தாளின் நகல் பெற்ற பிறகு அவர்கள் மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும். விடைத்தாளின் நகல் பெறுவதற்கான கட்டணம் விவரம் வருமாறு:- 
மொழிப்பாடங்களுக்கு தலா ரூ.550 ஏனைய பாடங்கள் (ஒவ்வொன்றிற்கும்) - ரூ.275, மறுகூட்டல் கட்டணம் பகுதி- 1 மொழி, பகுதி-2 மொழி (ஆங்கிலம்) மற்றும் உயிரியல் (ஒவ்வொன்றிற்கும்) - ரூ.305, ஏனைய பாடங்கள் (ஒவ்வொன்றிற்கும்) - ரூ.205 விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கான கட்டணத்தை விண்ணப்பிக்கவுள்ள பள்ளியிலேயே பணமாக செலுத்த வேண்டும்.
விடைத்தாள் நகல் 
விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும்போது, வழங்கப்படும் ஒப்புகை சீட்டினை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒப்புகை சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே தேர்வர்கள் தங்களது விடைத்தாளின் நகலினை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மறுகூட்டல் முடிவுகளை அறிந்துகொள்ளவும் இயலும்.விடைத்தாளின் நகலினை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டிய நாள் மற்றும் இணையதள முகவரி பின்னர் வெளியிடப்படும். 
துணைத்தேர்வு 
பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெறாதோருக்கும் தேர்வு எழுத வருகை புரியாதவர்களுக்கும் நடத்தப்படும் துணைத்தேர்வு ஜூன் மாதம் இறுதியில் நடத்தப்படும். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் விண்ணப்பிக்கும் தேதி குறித்து விரைவில் தனியே அறிவிக்கப்படும். இவ்வாறு அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.