புதிய ஓய்வூதிய திட்டத்தில் கட்டணம் வசூலிக்க உத்தரவு அரசு ஊழியர் அதிர்ச்சி

வேடசந்துார்:மத்திய அரசின் புதிய பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டத்தில், பல்வேறு தலைப்புகளின் கீழ், கட்டணம் வசூல் செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.



மத்திய, மாநில அரசுகளின் கீழ் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு, 1.1.2004 முதல் புதிய பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டம் நடைமுறைக்கு வந்து பத்து ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், மற்ற மாநிலங்கள் எல்லாம் நிதி பிடித்தம் செய்து, ஓய்வு ஊதிய நிதி ஒழுங்காற்று ஆணையத்தில் செலுத்தி உள்ளன. ஆனால், தமிழகத்தில் இதுநாள் வரை ஒரு பைசா கூட ஓய்வு ஊதிய திட்டத்தில் பணம் செலுத்தவில்லை என்பது தெரியவந்துள்ளது. இந்த பிரச்னை ஒரு புறம் நீடித்து வருகிறது.

இந்நிலையில், புதிய பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்ட சந்தாதாரர்களுக்கு கணக்குகளை பராமரிக்க, கட்டணம் வசூல் செய்ய மத்திய அரசின் ஓய்வு ஊதிய துறை உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி மத்திய கணக்கு பதிவு முகமைக்கு (சி.ஆர்.ஏ) வந்துள்ள உத்தரவில், கணக்கு துவங்குவதற்கு ரூ.50 ம், ஆண்டு பராமரிப்பு கட்டணமாக ரூ.190 ம், ஒவ்வொரு பண பரிவர்த்தனையின் போதும் ரூ.4 ம், ஓய்வு ஊதிய நிதி மேலாளர்களுக்கும் கணக்கு பராமரிப்பு
கட்டணம் செலுத்த வேண்டுமென அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்நிலையில், 1.1.04 க்கு முன்பே பணியில் சேர்ந்த அனைத்து அரசு ஊழியர்களுக்கும், வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட கணக்குளை பராமரிக்க, பராமரிப்பு கட்டணம் வசூல் செய்வதில்லை. மத்திய அரசின் தற்போதைய அறிவிப்பானது, அரசு ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக குமுறுகின்றனர்.

ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட துணை நிர்வாகி பிரடெரிக் ஏங்கல்ஸ் கூறியதாவது: புதிய ஓய்வு ஊதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு 12 ஆண்டுகள் ஆகியும், ஒருவருக்கு கூட ஓய்வூதியம் வழங்கவில்லை. கடந்த சட்டசபை தேர்தலின் போது, புதிய ஓய்வு ஊதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய திட்டத்தையே நடைமுறை படுத்த உள்ளதாக, முதல்வர் ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார். அதை இதுவரை நிறைவேற்றாததால், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் இந்த புதிய கட்டண அறிவிப்பானது, மேலும் அதிருப்தியை அதிகரிப்பதாக உள்ளது.

இது குறித்து தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் மவுனம் சாதிப்பது வியப்பை ஏற்படுத்துகிறது. குடும்ப ஓய்வு ஊதியம், மற்றும் ஓய்வு ஊதியம் உள்ளிட்ட பலன்களை முறையாக வழங்க முன்வர வேண்டும், என்றார்.