4 மாதங்கள் ஆகியும் வெளியிடப்படாத ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு: தமிழகம் முழுவதும் 8 லட்சம் பேர் காத்திருப்பு

அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு எழுத்துத்தேர்வு நடந்து 4 மாதங்களுக்கு மேலாகியும் தேர்வு முடிவு வெளியிடப்படவில்லை. தேர்வு முடிவுக்காக சுமார் 8 லட்சம் பேர் காத்திருக்கிறார்கள்.அரசு மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் 4,362 ஆய்வக உதவியாளர்களை நியமி்க்கும் வகையில் கடந்த மே மாதம் 31-ம் தேதி எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது. 
அரசு தேர்வுத்துறை நடத்திய இத்தேர்வினை தமிழகம் முழுவதும் 8 லட்சத்துக்கும் மேற்பட் டவர்கள் எழுதினர். எழுத்துத்தேர்வுக்கு 150 மதிப்பெண். இதில் தேர்ச்சி பெறுவோர் ‘ஒரு காலி யிடத்துக்கு 5 பேர்’ என்ற விகிதாச்சார அடிப்படையில் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு அதில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் ஆய்வக உதவியாளர்களை தேர்வு செய்ய அரசு திட்டமிட்டிருந்தது.
நேர்காணலில், வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்புக்கு (சீனியாரிட்டி) 10 மதிப்பெண், உயர் கல்வித்தகுதிக்கு 5 மதிப்பெண், பணி அனுபவத்துக்கு 2 மதிப்பெண், கேள்வி-பதிலுக்கு 8 மதிப்பெண் என மொத்தம் 25 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டிருந்தது. எழுத்துத்தேர்வில் பெற்ற மதிப்பெண் கணக்கில் கொள்ளப்படாது.இந்த நிலையில், ஆய்வக உதவியாளர் பணிக்கு எழுத்துத் தேர்வு மதிப்பெண்ணை கருத்தில் கொள்ளாமல் நேர்முகத்தேர்வு மதிப்பெண் மட்டும் பார்க்கப்பட்டால் பணி நியமனம் நேர்மையாக இருக்காது என்றும், அது சிபாரிசுக்கு வழிவகுக்கும் என்றும் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில், அரசின் நியமன முறைக்கு தடை விதித்த நீதிமன்றம், எழுத்துத்தேர்வு மதிப் பெண், நேர்காணல் மதிப்பெண் இரண்டையும் சேர்த்துத்தான் பணிநிய மனத்தை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆய்வக உதவியாளர் பணிக்கு எழுத்துத்தேர்வை நடத்திய அரசு தேர்வுத்துறையானது தேர்வர்களின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்து ஒப்படைத்துவிட்டது. ஆனால், இன்னமும் எழுத்துத்தேர்வு முடிவு வெளியாகவில்லை. இதனால், தேர்வெழுதிய 8 லட்சம் பேர் தேர்வு முடிவுக்காக காத்திருக்கிறார் கள்.
அரசு உத்தரவுக்காக...
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, “எழுத்துத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நேர்காணல் நடத்தி அதில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் ஆய்வக உதவி யாளர்களை தேர்வுசெய்ய அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால், உயர் நீதிமன்றமோ எழுத்துத் தேர்வு மதிப்பெண், நேர்காணல் மதிப்பெண் இரண்டின் அடிப்படை யில் ஆய்வக உதவியாளர்களை தேர்வுசெய்ய வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது. 
எனவே, எந்த முறையில் பணிநியமனத்தை மேற்கொள்ள வேண்டும் என்று அரசிடம் கேட்டுள்ளோம். அரசு உத்தரவு வந்ததும் அதற்கேற்ப பணிநியமனம் நடைபெறும்” என்று தெரிவித்தனர். பள்ளிக்கல்வித்துறை வரலாற் றில் ஆய்வக உதவியாளர்கள் நேரடியாக தேர்வுசெய்யப்படுவது இதுதான் முதல்முறை. இதுவரை யில் பதிவறை எழுத்தர் உள்ளிட்ட அடிப்படை பணியாளர்களுக்கு பதவி உயர்வு அளித்துத்தான் ஆய்வக உதவியாளர் பணி யிடங்கள் நிரப்பப்பட்டு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது. ஆய்வக உதவியாளர்களுக்குப் பட்டப் படிப்பு மற்றும் பி.எட். கல்வித்தகுதி இருப்பின் அவர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வுபெறும் வாய்ப்பு இருப்பதால் ஆய்வக உதவியாளர் தேர்வை பி.எட். பட்டதாரிகளும் அதிக எண்ணிக்கையில் எழுதியுள்ளனர்