மாணவர்கள் போராட்டம் நடத்தினால் தலைமையாசிரியர் மீது நடவடிக்கை?

'மது ஒழிப்பு உள்ளிட்ட போராட்டங்களில் பள்ளி மாணவர்கள் பங்கேற்றால், சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் எச்சரித்துள்ளார்.


                தமிழகத்தில், மதுவிலக்கு அமல் செய்யக்கோரியும், வேறு காரணங்களை முன் வைத்தும் நடத்தப்படும் போராட்டங்களில், அரசியல் கட்சிகள், நலச்சங்கங்கள், சமூக ஆர்வலர்களுடன், பள்ளி, கல்லுாரி மாணவர்களும் பங்கேற்பது வழக்கமாகி விட்டது. போராட்டங்களில், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பங்கேற்பதை தடுக்க, தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

முதற்கட்டமாக, பள்ளி மாணவர்கள், போராட்டங்களில் பங்கேற்க தடை விதித்தும், மீறி பங்கேற்றால், சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை, பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் பிறப்பித்துள்ளார்.

பள்ளிகளில் நடக்கும் இறைவணக்க கூட்டங்களில், மாணவர்களுக்கு தகுந்த முறையில் அறிவுரை வழங்கும்படியும், இயக்குனரது உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, பள்ளி தலைமையாசிரியர் ஒருவர் கூறுகையில், 'மதுவிலக்கு உள்ளிட்ட போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்றால், அவர்கள் மனதில் எதிர்மறை சிந்தனைகள் எழும் என்பதாலும், பாதுகாப்பு கருதியும், போராட்டங்களில் பங்கேற்காத வகையில் அறிவுரை வழங்கும்படி கூறியுள்ளனர்' என்றார்.

மேலும், அவர், 'பெற்றோர் அனுமதியின் பேரில் மாணவர்கள் பங்கேற்றால், தலைமையாசிரியர்கள் எவ்வாறு பொறுப்பேற்க இயலும்? அறிவுரைகள் மட்டுமே வழங்க முடியும். போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்றால், தலைமையாசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை என்பது ஏற்புடையதல்ல' என, அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.