தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பிற்கான விண்ணப்ப விநியோகம் மே மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்கும், ஜூன் 3-ஆவது வாரத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். கலந்தாய்வு நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பிற்கான விண்ணப்ப விநியோகம்  மே மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பிளஸ் 2 தேர்வில் கணிதம்-இயற்பியல்-வேதியியல்-உயிரியல் ஆகிய முக்கியப் பாடங்களின் விடைத் தாள்களைத்
திருத்தும் பணி, விடைத் தாள் திருத்தும் மையங்களில் நடைபெற்று வருகிறது. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியை தேர்வுத் துறை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. பிளஸ் 2 தேர்வு முடிவு தேதி தீர்மானிக்கப்பட்டவுடன், எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் மாணவர்களைச்சேர்ப்பதற்கான விண்ணப்ப விநியோகம் குறித்த தேதி, பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அளிப்பதற்கான கடைசித் தேதி உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய அறிவிக்கையை மருத்துவக் கல்வி இயக்குநரகம் வெளியிடும். பி.இ. கலந்தாய்வுக்கு முன்பு...தமிழகத்தில் உள்ள 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாநில ஒதுக்கீட்டுக்கு உரிய 2,172 எம்.பி.பி.எஸ். இடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 450-க்கும் மேற்பட்ட அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள 85 பி.டி.எஸ். இடங்கள் ஆகியவற்றை நிரப்ப விண்ணப்பம் விநியோகிக்கப்படும். சென்னை உள்பட அரசு மருத்துவக் கல்லூரிகள், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். விண்ணப்பம் விநியோகிக்கப்படும். கடந்த ஆண்டைப் போன்றே பி.இ. கலந்தாய்வுக்கு முன்பு ஜூன் 3-ஆவது வாரத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். கலந்தாய்வு நடைபெறும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.