கல்லுாரி விண்ணப்பம் நாளை பதிவு முடிவு

சென்னை : அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் சேர்வதற்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, நாளை முடிகிறது. அவகாசத்தை நீட்டிக்க, மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள், ஜூலை, 16ல் வெளியிடப்பட்டன. இதையடுத்து, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், இளநிலை பட்டப் படிப்பில், மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு, ஆன்லைனில் துவங்கியுள்ளது.ஜூலை, 20ல் பதிவு துவங்கிய நிலையில், நாளையுடன் முடிகிறது. இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.அதேநேரம், இளநிலை படிப்பில், அறிவியல் பிரிவில் சேரும் மாணவர்களுக்கு, ஆன்லைன் விண்ணப்ப பதிவில் தொழில்நுட்ப பிரச்னைகள் ஏற்பட்டதால், பல மாணவர்கள் பதிவு செய்ய முடியவில்லை.

எனவே, நாளை முடிய உள்ள விண்ணப்ப பதிவுக்கான அவகாசத்தை, ஒரு வாரம் நீட்டிக்க வேண்டும் என, மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.