பிளஸ் 1 பொது தேர்வு முடிவுகள் 8ம் தேதி வௌியாகிறது

சென்னை:பிளஸ் 1 பொது தேர்வு முடிவுகள், நாளை மறுநாள் வெளியாகின்றன.தமிழக பாடத்திட்டத்தில், 2017 - 18ம் கல்வி ஆண்டு முதல், பிளஸ் 1 வகுப்புக்கு, பொது தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நடப்பு கல்வி ஆண்டுக்கான, பொது தேர்வு, மார்ச், 6 முதல், 22 வரை நடந்தது.இந்த தேர்வில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 7,278 பள்ளிகளை சேர்ந்த, 8.16 லட்சம் பேர் பங்கேற்றனர். மேலும், 5,032 தனி தேர்வர்களுடன் சேர்த்து, மொத்தம், 8.21 லட்சம் பேர் தேர்வு எழுதினர். அவர்களில், 4.41 லட்சம் பேர் மாணவியர் மற்றும் 3.74 லட்சம் பேர் மாணவர்கள்.

இந்த ஆண்டு, இந்த தேர்வில், ஒவ்வொரு பாடத்திலும், தலா, 100 மதிப்பெண்களுக்கு, 35 மதிப்பெண் மட்டும் எடுத்தால் தேர்ச்சி என, அறிவிக்கப்பட்டுள்ளது.விடைத்தாள் திருத்தும் பணி, ஏப்., 6ல் துவங்கி, 15க்குள் முடிக்கப்பட்டது. தற்போது, மதிப்பெண் பட்டியல் தயாரிப்பு பணியும் முடிந்துள்ளது. நாளை மறுநாள், தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. காலை, 9:30 மணிக்கு, தேர்வு முடிவுகள் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

பள்ளிகளிலும், தேர்வு மையங்களிலும் பதிவு செய்த, மொபைல் போன் எண்ணுக்கு, மதிப்பெண் விபரம், குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். இந்த மதிப்பெண்கள், பிளஸ் 2 தேர்ச்சிக்கு கணக்கில் எடுக்கப்படாது. ஆனால், ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தபட்சம், 35 மதிப்பெண்களை பெற்றால் மட்டுமே, பிளஸ் 1ல் தேர்ச்சி என, அறிவிக்கப்படும்.

35க்கு குறைவாக மதிப்பெண் பெற்றவர்களும், பிளஸ் 2 வகுப்பில், தொடர்ந்து படிக்கலாம். ஆனால், ஜூனில் நடக்க உள்ள சிறப்பு துணை தேர்வு அல்லது அடுத்த மார்ச்சில் நடக்கும் பொது தேர்வில், அவர்கள் பங்கேற்று, தோல்வியுற்ற பாடங்களில் தேர்ச்சி பெற்று விட வேண்டும். இல்லாவிட்டால், பிளஸ் 2 முடிக்கும்போது, சான்றிதழ் வழங்கப்பட மாட்டாது.