கேந்திரிய வித்யாலயா பள்ளி திருநெல்வேலியில் போப்போது தொடங்கப்படும்?

திருநெல்வேலியில் போதிய இட வசதி இருந்தும், மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி இதுவரை தொடங்கப்படாததற்கு சில சக்திகள் முட்டுக்கட்டை போடுவதே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பாளையங்கோட்டையில் தரமான முறையில் கல்வி கற்பிக்கும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் அதிகம் உள்ளன. ஆனால், பிரபலமான அரசு உதவி பெறும் பள்ளிகளில் விதிகளை மீறி கல்விக் கட்டணம் 5இலக்கத்தில் வசூலிக்கப்படுகிறது. இதை தடுக்க வேண்டிய மாவட்ட நி்ரவாகமோ, கல்வித்துறையினரோ இதனை கண்டுகொள்வதில்லை. தனியார் பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்து உயர் நீதிமன்றம் நியமித்த குழு கட்டணத்தை நிர்ணயித்துள்ளது. ஆனால், இதன்படி கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பதை யாரும் கண்காணிப்பது இல்லை. இவற்றில் சாமானிய குடும்பத்தை சேர்ந்தவர்களின் குழந்தைகள் பயில்வது சிரமமாகவே உள்ளது.

மருத்துவக்கல்லூரிகள், மத்திய அரசின் பொறியியல் கல்லூரிகள் உள்ளிட்ட உயர் படிப்புகளுக்கு மத்திய கல்வி வாரிய பாடத்திட்டத்தின் அடிப் படையி்லேயே நுழைவுத்தேர்வு வினாத்தாள் தயாரிக்கப்படுவதால், திருநெல்வேலி போன்ற பின்தங்கிய மாவட்ட மாணவர்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் தரமான கல்லூரிகளில் சேரும்வாய்ப்பு பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.கே.வி.பள்ளிகள்இதை தவிர்க்கவும், சாமானியர்களின் குழந்தைகளும் குறைந்த கட்டணத்தில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் சேர்ந்து பயிலவும், திருநெல்வேலியில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி தொடங்க வேண்டும் என்பதே ஏழை, நடுத்தர மக்களின் எதிர்பார்ப்பு. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் கல்விக் கட்டணம் மிகவும் குறைவு.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளன. இந்நிலையில், நாடு முழுவதும் 50 புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை அமைக்க மத்திய அமைச்சரவை கடந்த மாதம் ஒப்புதல் வழங்கியது. தமிழகத்தில் திருப்பூர், மதுரை, கோவை, சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் இப்பள்ளிகள் அமைய உள்ளன. திருநெல்வேலியில் கே.வி. பள்ளி தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை1996-ம் ஆண்டு முதலே நிலுவையில் உள்ளது.

முட்டுக்கட்டை போடும் சக்திகள்

பேட்டையில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான காமராஜர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் போதிய இடவசதி இருப்பதால், அங்கு முதல் கட்டமாக ஆரம்ப நிலைவகுப்புகளுடன் கே.வி. பள்ளி தொடங்கப்பட இருப்பதாகவும், இதன் பிறகு நல்ல வாய்ப்பான இடத்தில் சொந்த கட்டிடம் கட்டப்படும் எனவும், கடந்த சில ஆண்டுகளாகவே தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.ஆனால், முயற்சி கைகூடும் வேளையில் சில சக்திகள் இதற்கு முட்டுக்கட்டை போடுவதால் இத்திட்டம் தள்ளிப்போவதாக கல்வியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். எம்.பி., எம்.எல்.ஏ.க்களும் இதற்கு குரல் கொடுக்கவில்லை.தட்டிக் கழிக்கின்றனர்விஜயநாராயணத்தில் உள்ள கே.வி. பள்ளி திருநெல்வேலியில் இருந்து 42 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கிருந்து மாணவர்கள் செல்வது சிரமம். சென்னையில் ஒன்றுக்கும் மேற்பட்ட கே.வி. பள்ளிகள் உள்ளன. கோவை, மதுரையில் ஏற்கெனவே கேவி பள்ளி உள்ள நிலையில் தற்போது மேலும் ஒன்று அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, திருநெல்வேலியில் இப்பள்ளி அமைவது அவசியம் என பெற்றோர் விரும்புகின்றனர்.