முதுநிலை மருத்துவ படிப்பு 901 இடங்கள் நிரம்பின

சென்னை:முதுநிலை மருத்துவ படிப்பில், 901 இடங்கள் நிரம்பின. ஜாதி ரீதியான ஒதுக்கீட்டுக்கு, இன்று கவுன்சிலிங் நடைபெற உள்ளது.

அரசு மருத்துவ கல்லுாரிகள் மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், எம்.டி., - எம்.எஸ்., உள்ளிட்ட, முதுநிலை மருத்துவ படிப்புகளில், மாநில அரசு ஒதுக்கீட்டிற்கு, 1,073 இடங்கள் உள்ளன. வரும் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், சென்னை, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில், ஏப்ரல், 1ல் துவங்கியது.
இரண்டு நாட்களில், 736 இடங்கள் நிரம்பின. நேற்று நடந்த பொது பிரிவினருக்கான கவுன்சிலிங் கில் பங்கேற்ற, 747 பேரில், 165 பேர் இடங்கள் பெற்றனர். மூன்று நாட்களில், 901 இடங்கள் நிரம்பின. மற்ற பிரிவினருக்கான ஒதுக்கீட்டுக்கு, இன்று கவுன்சிலிங் நடைபெறுகிறது.