தேர்தல் பணி அரசு ஊழியர்கள் அந்த வாக்குசாவடியிலேயே ஓட்டுப் போடலாம்...! - புதிய நடைமுறை

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல்  ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. 
  
ஈரோடு மாவட்டத்தில்  ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி, அந்தியூர், கோபி,  பவானி, பவானிசாகர், பெருந்துறை என 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.  மொத்தம் 2,213 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளது. .   ஒரு வாக்குச்சாவடி மையத்திற்கு தலைமை அலுவலர் உள்பட 5 ஊழியர்கள் என மாவட்டம் முழுவதும் 10 ஆயிரத்து 675 ஊழியர்கள் பணியாற்ற உள்ளனர்.
தேர்தலில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பெரும்பாலும் அவர்களின் தொகுதிக்குள்ளேயே பணி நியமனம் வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்து வந்தனர்.
இதுகுறித்து ஈரோடு தேர்தல் அதிகாரி கூறும் போது,   ‘’இந்தத் தேர்தலில்  பணியாற்றும் ஊழியர்கள் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் ஓட்டு போடும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.  இதன்மூலம் தபால் ஓட்டு போடுவதற்கு பதிலாக பணியாற்றும் வாக்குச்சாவடி மையங்களிலேயே  பணி நியமன ஆணையை காண்பித்து ஊழியர்கள் ஓட்டு போட்டுக் கொள்ளலாம்.
சென்ற தேர்தலில் இந்த முறை அமல் படுத்த முயற்சி செய்யப்பட்டது எனினும் வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர் இடம் பாகம் எண் வரிசை எண் உள்ளிட்ட விவரங்கள் இல்லாததால் சில குளறுபடிகள் ஏற்பட்டன. இதற்குத் தீர்வு காணும் வகையில் தேர்தல் பணியாற்றும் ஊழியர்களுக்கு பணி நியமனத்தில் அனைத்து விவரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக ஊழியர்கள் பெயர் பணிநிலை வாக்காளர் அடையாள அட்டை எண் பாகம் எண் வரிசை எண் புகைப்படம் ஆகிய விவரங்கள் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதனால் ஊழியர்கள் எந்த குழப்பமும் இல்லாமல் வாக்களிக்க முடியும் . தேர்தல் பணியாற்றும் ஊழியர்கள் வெளி பகுதியைச் சேர்ந்தவராக இருந்தால் மட்டுமே அவர்களுக்கு தபால் ஓட்டு போடுவதற்கான படிவம் வழங்கப்படும் என்றார்.
ஈரோடு மாவட்டம் மட்டுமல்ல தமிழகம் முழுக்க தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், அதிகாரிகள் சொந்த மாவட்டத்தில் வாக்கு உள்ள தொகுதியில் பணிபுரிந்தால் பணியாற்றும் வாக்கு சாவடியிலேயே ஒட்டு போடலாம்.