பகுதி நேர ஆசிரியர்கள் : அரசுக்கு கோரிக்கை

சென்னை: 'பகுதி நேர ஆசிரியர்களாக உள்ளோரை, 10 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியத்தில், முழு நேர ஆசிரியர்களாக பணியமர்த்த வேண்டும்' என, பகுதி நேர ஆசிரியர்கள்
கூட்டமைப்பு, முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.சங்க ஒருங்கிணைப்பாளர், செந்தில்குமார், முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:ஜாக்டோ - ஜியோ வேலைநிறுத்தப் போராட்டத்தால், மாணவர் நலன் கருதி, 10 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியத்தில், தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க, அரசு உத்தரவிட்டுள்ளது. இதே ஊதியத்தில், எட்டு ஆண்டுகளாக, பகுதி நேர ஆசிரியர்களாக பணிபுரிந்து வருவோரை, முழு நேரமாக பணியமர்த்த வேண்டும்.பகுதி நேர ஆசிரியர்கள், ஏற்கனவே நடந்த போராட்டங்களின் போதும், முழு நேரம் பாடம் நடத்தி உள்ளனர். ஆசிரியர்கள் விடுப்பு எடுக்கும் போது, வகுப்பு நடத்துகின்றனர். போதுமான கல்வித் தகுதியும் உள்ளது.ஏழு ஆண்டுகளாக, 7,700 ரூபாய் சம்பளத்தில் பணிபுரிந்து வருகின்றனர். எனவே, பகுதி நேர ஆசிரியர்களை, 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில், முழு நேர ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.