ஜாக்டோ ஜியோ போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

மதுரை : ஜாக்டோ ஜியோ போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்படுவதாக மதுரை ஐகோர்ட் கிளையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை(டிச.,04) முதல் வேலை நிறுத்த போராட்டம் நடத்த உள்ளதாக ஜாக்டோ ஜியோ அறிவித்திருந்தது. இந்நிலையில் ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு தடை கோரி மதுரை ஐகோர்ட் கிளையில் லோகநாதன் என்பவர் மனுத்தாக்கல் செய்யதிருந்தார். இதில், கஜா புயல் பாதிப்பு, அரையாண்டு தேர்வு சமயத்தில் போராட்டம் நடத்துவது பாதிப்பை ஏற்படுத்தும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இவ்வழக்கை அவசர வழக்காக விசாரிக்கவும் கேட்கப்பட்டிருந்தது. கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள் இன்று (டிச.,3) பகல் 1 மணிக்கு இந்த அவசர வழக்கை நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் அமர்வு விசாரிக்கும் என தெரிவிக்கப்பட்டது.


வழக்கு விசாரணைக்கு வந்த போது, போராட்டத்தை டிச.,10 வரை ஒத்திவைக்க முடியுமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பியதுடன் பகல் 1.30 மணிக்கு விசாரணையை ஒத்திவைத்தனர். மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்த போது, ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் பதிலளிக்கப்பட்டது. இதில், கோர்ட் அறிவுறுத்தலை ஏற்று டிச.,10 வரை தற்காலிகமாக போராட்டத்தை ஒத்திவைப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஜாக்டோ ஜியோ ஊதிய விவகாரம் தொடர்பாக கடந்த முறை பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்க வேண்டும் என நீதிபதிகள் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர். ஒரு நபர் கமிஷனின் பரிந்துரையையும் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.