கல்வி அலுவலகங்களில் இணையம் இல்லை : தனியார் மையங்களில் சம்பள பட்டியல் தயாரிப்பு

சிவகங்கை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் வட்டார கல்வி அலுவலகங்களில் 7 மாதங்களுக்கு முன், இணையம் இணைப்பு நிறுத்தப்பட்டது. இதனால் தனியார் மையங்களில் ஆசிரியர் சம்பள பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.
தொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கு ஊதியம் உள்ளிட்ட பணப்பலன் வழங்கும் பணியை வட்டார கல்வி அலுவலர்கள் மேற்கொள்கின்றனர். கருவூலம் கணினிமயமாக்கப் பட்டதால் ஊதியம் பட்டியல் 'ஆன்லைன்' மூலம் அனுப்ப வேண்டும். இதற்காக 385 வட்டார கல்வி அலுவலகங்களிலும் எல்காட் மூலம் கணினிகள், இணைய இணைப்பு வழங்கப்பட்டன.
பல மாதங்களாக தொடக்கக் கல்வித்துறை கட்டணம் செலுத்தவில்லை. ஒவ்வொரு அலுவலகத்திலும் 12 ஆயிரம் ரூபாய் வரை பாக்கி உள்ளது.மாநிலம் முழுவதும் பல லட்சம் ரூபாய் நிலுவைத்தொகை இருப்பதால் இணையதள இணைப்பு ஏழு மாதங்களுக்கு முன், துண்டிக்கப்பட்டது.
இதனால் ஆசிரியர்கள் சம்பளப் பட்டியல் சிவகங்கை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் தனியார் மையங்களில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் தேர்வு எழுதிய மாணவர்களின் விபரம் திருடுபோனது. அதேபோல் தனியார் மையத்தில் சம்பளப் பட்டியல் தயாரிப்பதால், ஆசிரியர்களின் விபரங்களும் திருடுபோக வாய்ப்புள்ளது என, புகார் எழுந்தது.
 
இதையடுத்து 'தனியார் மையங்களில் சம்பளப் பட்டியல் தயாரித்தால் நடவடிக்கை எடுக்கப் படும் ,' என கல்வி அமைச்சர் செங்கோட்டையன் எச்சரித்தார்.வட்டார கல்வி அலுவலகங்களில் இணைய இணைப்பு துண்டித்து 7 மாதங்களாகியும், இதுவரை சரி செய்யவில்லை. மேலும் வட்டார கல்வி அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பட்டியல் தயாரிப்பது குறித்து இதுவரை பயிற்சி அளிக்கவில்லை. இதனால் ஆசிரியர்களே தனியார் மையங்களில் சம்பள பட்டியலை தயாரிக்கின்றனர்.