ஓய்வூதியர் வாழ்நாள் சான்று சமர்ப்பிக்க வேண்டும் :கருவூல கணக்கு ஆணையர்

ஓய்வூதியர்கள், தங்கள் வாழ்நாள் சான்றை, அடுத்த ஆண்டு சமர்ப் பிக்க வேண்டும்' என, கருவூல கணக்கு ஆணையர், ஜவகர் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:தமிழக அரசின் ஓய்வூதியர்களில் சிலர், கடந்த ஆண்டு வரை, வங்கிகளில் நேரடியாக ஓய்வூதியம் பெற்று வந்தனர். அவர்களுடைய சிரமங்களை குறைக்க, பொதுத்துறை வங்கி திட்டத்தின் வழியே, ஓய்வூதியம் பெற்ற, 70 ஆயிரம் பேர், இந்த ஆண்டு முதல், கருவூலத்துறை திட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.




அவர்கள், தற்போது, மாவட்ட கருவூலங்கள், சார் கருவூலங்கள், ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் ஆகியவற்றின் வழியே, ஓய்வூதியம் பெறுகின்றனர். பொதுத்துறை வங்கி திட்டத்தில் உள்ள, தமிழக அரசு ஓய்வூதியர்கள், கடந்த ஆண்டு, நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில், தங்கள் வாழ்நாள் சான்றை, வங்கிகளில் அளித்து வந்தனர்.தற்போது, அவர்களுடைய அனைத்து பதிவேடுகளும், ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் மற்றும் கருவூலங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. 


எனவே, அடுத்த ஆண்டுக்கான, தங்கள் வாழ்நாள் சான்றை, தங்களது ஓய்வூதிய அலுவலகம், மாவட்ட கருவூலங்கள், சார் கருவூலங்கள் ஆகியவற்றில், 2019 ஏப்., 1 முதல், ஜூன், 30க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.