'நீட்' தேர்வு விண்ணப்பம்

'மருத்துவ படிப்புக்கான, நீட் நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க, அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உதவ வேண்டும்' என, பள்ளி கல்வி இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்.

பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர, 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டு, நீட் தேர்வு, மே, 5ல் நடக்கிறது. முந்தைய கல்வியாண்டில், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., வழியாக, நீட் தேர்வு நடத்தப்பட்டது. இந்த ஆண்டு, தேசிய தேர்வு முகமையான, என்.டி.ஏ., வழியே தேர்வு நடத்தப்படுகிறது.
தேர்வில் பங்கேற்போருக்கு, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, கடந்த, 1ல் துவங்கியது; 30ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. தனியார் பள்ளி மாணவர்கள், சிறப்பு பயிற்சி எடுக்கும் நிறுவனங்கள் வழியாக, ஆன்லைன் விண்ணப்பம் பதிவு செய்கின்றனர். சில இடங்களில், பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு, நீட் தேர்வுக்கான பதிவு மேற்கொள்ளப்படுகிறது.
இந்நிலையில், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும், நீட் தேர்வில் பங்கேற்கும் வகையில், விண்ணப்ப பதிவுக்கு உதவுமாறு, அரசு பள்ளி ஆசிரியர்கள் அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.