அடுத்த மாதம் 27-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யவேண்டும், 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத்தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும், தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பூதியத்தை ரத்து செய்து காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் உள்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் (தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பு) நேற்று ஒருநாள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


சென்னையில் எழிலகம், தலைமைச் செயலகம், கலெக்டர் அலுவலகம், பனகல் மாளிகை உள்பட மைய அலுவலகங்களில் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் நேற்று பணியில் விடுப்பு எடுத்துக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை எழிலகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் வெங்கடேசன், தாமோதரன், செய்தி தொடர்பாளர் கு.தியாகராஜன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

எங்களின் 5 அம்ச கோரிக்கைகளை கடந்த ஆண்டு நவம்பர் 3-ந் தேதிக்குள் நிறைவேற்றி தருவோம் என அரசு உத்தரவாதம் அளித்தது. ஆனால் அதை செய்யவில்லை. எனவே இனியும் அமைதி காப்பதில் பயனில்லை. இந்த தற்செயல் விடுப்பு போராட்டம் ஒரு ஆரம்பம் தான். நவம்பர் 27-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருக்கிறோம். அதற்கான ஆயத்த மாநாடு சேலத்தில் 13-ந் தேதி நடக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தமிழகம் முழுவதும் ஜாக்டோ-ஜியோ அமைப்பு நடத்திய தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஏராளமான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். முக்கியமான மைய அலுவலகங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தற்செயல் விடுப்பு போராட்டம் காரணமாக அரசு அலுவலகங்களில் நேற்று பணிகள் பாதித்தன. அனைத்து துறை அலுவலகங்களும் வெறிச்சோடி காணப்பட்டன. ஒரு சிலர் மட்டுமே வேலைபார்ப்பதை பார்க்க முடிந்தது.