காரைக்குடி 'சிக்ரி'யில் 'கிரீன் பட்டாசு' : ஒலி, புகை மாசு குறைவு

காரைக்குடியில் மத்திய அரசின் கீழ் செயல்படும் 'சிக்ரி'யில் விஞ்ஞானி சுப்ரதா குண்டு தலைமையிலான குழுவினர் புகைமாசை கட்டுப்படுத்தும் பசுமை பட்டாசை உருவாக்கியுள்ளனர்.


இயக்குனர் விஜயமோகனன் பிள்ளை, விஞ்ஞானி சுப்ரதா குண்டு கூறுகையில், ''நைட்ரேட்டை அடிப்படையாக கொண்டு சிவகாசியில் பட்டாசு தயாரிக்கப்படுகிறது. நாட்டின் மொத்த தேவையில் 85 சதவீதம் இங்கு தயாரிக்கப்படுகிறது.ஒலி மற்றும் காற்று மாசால் பட்டாசு விற்க டில்லியில் தடை உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து, பசுமை பட்டாசு தயாரிக்க வேண்டிய கட்டாயத்தில் உற்பத்தியாளர்கள் உள்ளனர். சிவகாசியில் அலுமினியத்தை முக்கிய மூலப்பொருளாக கொண்டு, சல்பர், கார்பன், பொட்டாசியம் நைட்ரேட் சேர்த்து தயாரிக்கப்படுகிறது.தற்போது சிக்ரி கண்டுபிடித்துள்ள பட்டாசில், அலுமினியத்துக்கு பதில் மெக்னீசியம் சேர்க்கப்பட்டுள்ளது. சல்பர், கார்பன் தேவையில்லை. ஒலி அளவு 120-லிருந்து 111 டெசிபலாக குறைக்கப்படும். காற்று மாசு 70 சதவீதமாக குறைக்கப்பட உள்ளது. அடுத்த ஆண்டு தீபாவளிக்கு பட்டாசுகள் சந்தைக்கு வர வாய்ப்பு உள்ளது, இதில் சிக்ரியுடன் நாக்பூரின் நீரி ஆராய்ச்சி நிலையம், சிவகாசி டான்பாமா இணைந்து செயல்படுகின்றது, என்றனர்.