'பாட புத்தக தயாரிப்பு பணிகளில், தொய்வு இல்லை'-பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன்

'பாட புத்தக தயாரிப்பு பணிகளில், தொய்வு இல்லை' என, பள்ளி கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில், பள்ளி கல்வி அமைச்சராக, செங்கோட்டையன் பதவியேற்ற பின், ஒன்று முதல், பிளஸ் 2 வகுப்புகள் வரை புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. பாடத்திட்டங்களை மாற்றும் பொறுப்பு, பள்ளி கல்விச் செயலராக பணியாற்றிய, உதயசந்திரன் வசம் இருந்தது. 


நடப்பு கல்வியாண்டில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்பு களுக்கு, புதிய பாட புத்தகங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மற்ற வகுப்புகளுக்கு, வரும் கல்வி ஆண்டில் அறிமுகமாக உள்ளன. இந்நிலையில், பாட புத்தக தயாரிப்பு பணிகளில் தாமதம் ஏற்படுவதாகவும், எழுத்தாளர்கள், மேடை பேச்சாளர்கள் பலர், பாட புத்தக தயாரிப்பு மற்றும் அதன் அம்சங்களில், தங்கள் கருத்துகளை திணிப்பதாகவும் புகார்கள் எழுந்தன.அதற்கேற்ற வகையில், புதிய பாடத்திட்ட பணிகளை கவனித்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரி உதய சந்திரன், தொல்லியல் துறைக்கு மாற்றப்பட்டார். 

அதனால், பாட புத்தக தயாரிப்பு பணிகளில், சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் பரவின.இந்தச் சூழலில், பாடத்திட்ட தயாரிப்பு வல்லுனர் கள் குழுவின் கூட்டம், சில தினங்களுக்கு முன், குழு தலைவர் பேராசிரியர், அனந்த கிருஷ்ணன் தலைமையில் நடந்தது.

இதுதொடர்பாக, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர், அறிவொளி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:பாடத்திட்ட தயாரிப்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. இதற்காக, உழைத்து கொண்டிருக்கும் பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் ஊழியர்களை குழுவின் தலைவர் பாராட்டினார். புதிய பாடத்திட்டம் அமலானதால், தமிழகம் முழுவதும், 2.29 லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி தரப்பட்டுள்ளது. 


தனியார் பள்ளி ஆசிரியர்கள், 80 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்ட பணிகள், திட்டமிட்ட இலக்கில், வேகமாக நடந்து வருகின்றன. இந்த பணிகளில், எவ்வித சுணக்கமும் இல்லை. ஒவ்வொரு ஆண்டும், பாட புத்தகங்களில் திருத்தங்கள் செய்யவும், மாற்றம் கொண்டு வரவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எந்த வித தொய்வும் இல்லாமல், பாட புத்தகங்கள் தயாரிக்கும் பணியும் நடக்கிறது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
My Blogger TricksAll Blogger TricksLatest Tips and Tricks