புதிய பாடத்திட்ட குறைபாடுகள் சரிசெய்யப்படும் : உதயசந்திரன் தகவல்

மதுரை: "புதிய பாடப் புத்தகங்களில் உள்ள குறைபாடுகள் மறுபதிப்பில் சரிசெய்யப்படும்," என பள்ளிக் கல்வித்துறை பாடத்திட்ட செயலாளர் உதயசந்திரன் கூறினார்.

மதுரையில் அவர் கூறியதாவது:தமிழக கல்வித்துறையில் 12 ஆண்டுகளுக்கு பின் பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. குறுகிய காலத்தில் உருவாக்கப்பட்டாலும் பல்வேறு தரப்பிலும் வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 பாடப் புத்தகங்களை கற்பிக்கும் ஆசிரியர்களிடம் அதில் உள்ள குறைகள் குறித்து தமிழகம் முழுவதும் கருத்துக்களும், மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளும் பெறப்படுகின்றன.பல ஆலோசனைகள் கிடைத்துள்ளன. விமர்சனங்களும் எழுந்துள்ளன. இதன் அடிப்படையில் குறைபாடுகள் மறுபதிப்பில் சரிசெய்யப்படும். குறிப்பாக, பிளஸ் 1 தாவரவியல், விலங்கியல் பாடப் புத்தகங்களில் அதிக பக்கங்கள் உள்ளதாகவும், முழுமையாக நடத்த முடியவில்லை என்றும் கருத்து தெரிவிக்கின்றனர். இதை பாடங்களாக ஆசிரியர்கள் பார்க்காமல் மாணவர்கள் எதிர்கால நலன்சார்ந்ததாக கருதி அர்ப்பணிப்புடன் கற்பிக்க வேண்டும். புதிய பாடத்திட்டத்தின் வெற்றி ஆசிரியர்கள் கைகளில் தான் உள்ளது என்றார். இணை இயக்குனர் பொன்குமார், முதன்மை கல்வி அலுவலர் கோபிதாஸ் உடனிருந்தனர்.