தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுத் தடைக்கான அரசாணை வெளியீடு

சென்னை: தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு தடை செய்யப்படுவதற்கான அரசாணை வெள்ளியன்று
வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு தடை செய்யப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஜூன் 5ம் தேதி அன்று அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி வரும் 2019 ஜனவரி 1ம் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு தடை செய்யப்படுவதற்கான அரசாணை வெள்ளியன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அரசாணையில் சில விதிவிலக்குகள் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி பால் மற்றும் பால் பொருட்களை பேக் செய்ய பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள், தோட்டக்கலை மற்றும் வனத்துறை மூலம் மரங்கள் வளர்ப்பதற்கு அரசு வழங்கும் பொருட்கள், ஆகியவற்றை உத்தரவின் அடிப்படையில் விலக்கு பெற்று பயன்படுத்தலாம்,
அதேசமயம் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் தயாரித்து ஏற்றுமதி செய்யப்படும் பிளாஸ்டிக் பொருட்கள், உற்பத்தி நிறுவனத்தில் இருந்து பேக் செய்ய பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் மற்றும் மக்கும் பிளஸ்டிக் ( Bio Degradable plastic) ஆகியவைக்கு மட்டும் இந்த அரசாணையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.