பி.எட்., கவுன்சிலிங் நாளை துவக்கம்

பி.எட்., படிப்புக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், நாளை துவங்கி, வரும், 24ம் தேதி வரை நடக்கிறது.

தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் இணைப்பில், 14 அரசு கல்லுாரிகள், ஏழு அரசு உதவி பெறும் கல்லுாரிகள் உட்பட, 500க்கும் மேற்பட்ட கல்வியியல் கல்லுாரிகள் செயல்படுகின்றன. இந்த கல்லுாரிகளில், பி.எட்., மற்றும் எம்.எட்., இரண்டு ஆண்டு பட்டப்படிப்புகள் நடத்தப் படுகின்றன. இதில், அரசு மற்றும் அரசு உதவி பெறும், 21 கல்லுாரிகளில், பி.எட்., படிப்புக்கு, 1,707 இடங்கள் உள்ளன. 



இந்த இடங்களுக்கு, அரசின் சார்பில், ஒற்றை சாளர மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. சென்னையில் உள்ள, லேடி வெலிங்டன் கல்வியியல் கல்லுாரி பொறுப்பு முதல்வர் தில்லை நாயகி தலைமையிலான கமிட்டி, இந்த ஆண்டு கவுன்சிலிங்கை நடத்துகிறது.

கவுன்சிலிங்கில் பங்கேற்க, 6,073 பேர் தகுதி பெற்றுள்ளனர். அவர்களுக்கு, வரும், 18ம் தேதி முதல், 24ம் தேதி வரை, ஒற்றை சாளர கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இதற்கான அறிவிப்பை, மாணவர் சேர்க்கை கமிட்டி செயலர், தில்லை நாயகி வெளியிட்டு உள்ளார். இதன்படி, நாளை சிறப்பு பிரிவினருக்கு கவுன்சிலிங் நடத்தப்படும். 

வரும், 19ல், தமிழ், ஆங்கிலம்; 20ல், தாவரவியல், விலங்கியல்; 21ல், இயற்பியல், வரலாறு பிரிவினருக்கான கவுன்சிலிங் நடத்தப்படும். மேலும், வரும், 22ல், வேதியியல், மனை அறிவியல், பொருளியல், வணிகவியல்; 23ல், புவியியல், கணினி அறிவியல், கணிதம் மற்றும் 24ம் தேதி, கணிதம் மற்றும் பழங்குடியினர் பிரிவினருக்கான கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.