'டான்செட்' நுழைவு தேர்வுக்கு 'ஸ்காலர்ஷிப்' கிடையாது

தமிழகத்தில், முதுநிலை இன்ஜி., படிப்பவர் களில், 'கேட்' தேர்வு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும், மத்திய அரசின் கல்வி உதவி தொகையை வழங்க, ஏ.ஐ.சி.டி.இ., ஒப்புதல் அளித்துள்ளது.அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., சார்பில், பல்வேறு உதவி தொகைகள், மத்திய அரசிடமிருந்து, நேரடியாக மாணவர்களின் வங்கி கணக்கிலேயே செலுத்தப்படுகின்றன. 


முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளில், மாணவர்களை ஊக்குவிக்க, இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.இந்த திட்டங்களில், தமிழகத்தில், அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள கல்லுாரிகளில், இன்ஜி., படிக்கும் முதுநிலை மாணவர்களுக்கு, கல்வி உதவி தொகை கிடைக்காத நிலை இருந்தது. 

இது குறித்து, ஏ.ஐ.சி.டி.இ.,க்கு, அண்ணா பல்கலை சார்பில் கடிதம் எழுதப்பட்டது.இது குறித்து, அண்ணா பல்கலை அதிகாரிகளிடம், ஏ.ஐ.சி.டி.இ., தலைவர், அனில் சகஸ்ரபுதே ஆலோசனை நடத்தி உள்ளார். இதில், அண்ணா பல்கலையில், முதுநிலை படிக்கும் மாணவர்களின் விபரங்களை, அண்ணா பல்கலை அதிகாரிகள் சமர்ப்பித்துள்ளனர்.இதையடுத்து, எம்.இ., - எம்.டெக்., என்ற, முதுநிலை படிக்கும் மாணவர்களில், 'கேட்' என்ற மத்திய அரசின் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும், மாதம், 16 ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்க, ஏ.ஐ.சி.டி.இ., ஒப்புதல் அளித்துஉள்ளது.

கோரிக்கை

ஆனால், அண்ணா பல்கலை நடத்தும், 'டான்செட்' நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்று, முதுநிலை இன்ஜி., படிப்பில் சேர்ந்தவர்களுக்கு, மத்திய அரசின் உதவி தொகை வழங்க வழியில்லை என, தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், 'தமிழக டான்செட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும், மத்திய அரசின் உதவி தொகையை வழங்க வேண்டும்' என, மாணவர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.