B.Arch., படிப்புக்கு இன்று முதல், 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கலாம்

பி.ஆர்க்., என்ற கட்டடவியல் படிப்புக்கு, இன்று முதல், 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கலாம் என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், அண்ணா பல்கலை வழியாக நடத்தப்படுகிறது. அதேபோல், அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள, 50க்கும் மேற்பட்ட, பி.ஆர்க்., கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங்கும், அண்ணா பல்கலையால் தனியாக நடத்தப்படுகிறது. 


இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங்குக்கு, இன்று முதல், ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவங்கும் என, அண்ணா பல்கலை மாணவர் சேர்க்கை கமிட்டி அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் அண்ணா பல்கலை அமைத்துள்ள, உதவி மையங்களுக்கு, மாணவர்கள் நேரில் சென்று, ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். வீட்டில் இருந்தபடியே கணினி வழியாக, tnea.ac.in/barch 2018 அல்லது, www.annauniv.edu/barch2018 என்ற இணையதள இணைப்பிலும் விண்ணப்பிக்கலாம். 

மாணவர்கள், ஜூலை, 15க்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணத்தை, 'ஆன்லைன்' வங்கி பண பரிவர்த்தனையாகவும், வரைவோலையாகவும் செலுத்தலாம். பதிவின் போதே, சான்றிதழ் சரிபார்ப்புக்கு, எந்த உதவி மையத்திற்கு வர விருப்பம் உள்ளது என்பதையும் குறிப்பிட வேண்டும். அதன்பின், அண்ணா பல்கலை அறிவிக்கும் தேதியில், அந்த உதவி மையத்துக்கு, அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் நேரில் செல்ல வேண்டும்.
விளையாட்டு பிரிவு ஒதுக்கீடு கோரும் மாணவர்கள், சென்னையில், அண்ணா பல்கலைக்கு மட்டுமே, சான்றிதழ் சரிபார்ப்புக்கு வர முடியும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது