'APPS' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் சிவகங்கை மாவட்டம் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றியம் கத்தாளம்பட்டு அரசு தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு அலைபேசி செயலி மூலம் பாடம் நடத்தப்படுகிறது.

2017-18 க்கு கனவு ஆசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ள இப்பள்ளி ஆசிரியர் கணேசனின் சொந்த முயற்சியால் விர்சுவல் ரியாலிட்டி, 4 டி கிளாஸ், மைக், கணினி, புரஜக்டர் போன்றவற்றை பயன்படுத்தி ஒன்று முதல் 5 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கிறார். ஒன்றாம் வகுப்பு மாணவர் கூட கணினியை இயக்குகிறார். 



கலை, இலக்கியம், யோகா, செஸ், பேச்சு, நாடகம் போட்டிகளிலும் மாணவர்கள் பல பரிசுகளை அள்ளியுள்ளனர். பள்ளியில் நுாலகம், அறிவியல், கணித ஆய்வகம் போன்ற வசதிகள் உள்ளன. குழந்தைகள் அமர்ந்து படிக்க வட்ட மேஜைகள், நாற்காலிகளை கிராமத்தினர் நன்கொடையாக வழங்கியுள்ளனர். தாய், தந்தை இல்லாத குழந்தைகளுக்கு ஆசிரியர் கணேசன், தலைமைஆசிரியர் வளர்மதி சொந்த பணத்தில் ஆண்டுதோறும் ஆயிரம் ரூபாயை கொடுக்கின்றனர்.

கணேசன் கூறியதாவது: இன்பர்மேஷன் அன்ட் கம்யூனிகேஷன் டெக்னாஜி மூலம் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கிறேன். இதனால் கனவு ஆசிரியர் விருது கிடைத்தது. நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதால் மாணவர்கள் எளிதில் கற்கின்றனர். பி.எஸ்சி., சைக்காலஜி படித்துள்ளதால் குழந்தைகளின் மனநிலைக்கு ஏற்ப கற்பிக்கிறேன். 
படிப்பு மட்டுமின்றி இணைய செயல்பாடுகளிலும் மாணவர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர். ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15 ல் 51 மரக்கன்றுகள் வழங்குவோம். கிராமமக்களும் தேவையான உதவிகளை செய்கின்றனர், என்றார்.