`நான் ரீல் ஹீரோதான்... நீங்கதான் ரியல் ஹீரோ!’ - ஆசிரியர் பகவானுக்கு சமுத்திரக்கனி பாராட்டு




மாணவர்களின் நண்பனாகவும் நல்லாசிரியராகவும் கடந்த நான்கு ஆண்டுகளாக அவர் சிறப்பாகச் சேவையாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஆசிரியர்களுக்கான பொது மாறுதலில் வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டார்.

 இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பகவானின் பணி மாறுதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அது தவிர பள்ளியைப் பூட்டி போராட்டமும் நடத்தினார்கள். அந்த நேரம் பள்ளிக்கு வந்த பகவானை, மாணவர்கள் கட்டிப்பிடித்து அழுதனர்.

இந்தச் செய்தி தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து நாடு முழுவதும் ஆசிரியர் பகவானுக்கு நடிகர்கள், அரசியல் பிரமுகர்கள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். இன்று மாலை நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனி பகவானை செல்போனில் அழைத்து வாழ்த்துகள் சொல்லி இருக்கிறார். `மாணவர்களின் நலனுக்காகத் தொடர்ந்து பாடுபடுங்கள். நான் சாட்டை படத்தின் ரீல் ஹீரோதான்; நீங்கள்தான் ரியல் ஹீரோ. உங்களை நேரில் வந்து சந்திக்கிறேன்’ என்று சொல்லி இருக்கிறார். சமுத்திரக்கனியின் பாராட்டால் உள்ளம் நெகிழ்ந்து இருக்கிறார் பகவான்.

அடுத்த சில வினாடிகளில் தனது செல்போனுக்கு வந்த இன்ப அதிர்ச்சி ஹலோ என்றதும் மறு முனையில் நான் வைகோ பேசுகிறேன் என்றவுடன் நெகிழ்ச்சியில் உடைந்து போனார் பகவான். தனது வானளாவிய பாராட்டுக்களைத் தெரிவித்த வைகோவின் நம்பிக்கை வார்த்தைகளில் உள்ளம் நெகிழ்ந்து போனார் பகவான். வைகோவின் பண்பையும் அரசியல் நாகரீகத்தையும் கண்டு வியந்து போனேன் என்று தெரிவித்தார் பகவான். வைகோவின் வாழ்த்து வியந்து நிற்கிறார் பகவான்.

வெளியகரம் திருவள்ளூர் மாவட்டத்தின் கடைசி எல்லைப் பகுதி. வெளியகரம் ஒரு சிறிய கிராமம். இந்தக் குக்கிராமத்தில் தெலுங்கு தான் தாய் மொழி. இந்த ஊரில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 280 மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்தப் பள்ளியில் ஆங்கில பாடத்தின் ஆசிரியராக பள்ளிப்பட்டு அடுத்த பொம்மராஜிப்பேட்டைக் கிராமத்தைச் சேர்ந்த எம்.ஏ பி.எட் படித்த 28 வயது பகவான் கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பணிக்குச் சேர்ந்தார். பணியில் சேர்ந்த நாள் முதல் மாணவர்களிடம் ஆசிரியராக இல்லாமல் பள்ளித் தோழனாகவே பாடம் நடத்தி வருகிறார்.

ஆங்கிலப் பாடத்தில் அதிக நாட்டம் இல்லாத மாணவர்கள் ஆசிரியர் பகவான் பாடம் நடத்தும் முறையை கண்டு வியந்து, ஆர்வத்துடன் படித்தனர். தெலுங்கை தாய்மொழியாக கொண்ட மாணவர்கள் ஆங்கிலப் பாடம் கற்றுத்தரும் முறையைக் கண்டு விரும்பி படிக்க ஆரம்பித்தனர். நண்பனாக விளங்குகிற ஆசிரியர் பகவானை இடமாற்றம் செய்ய கூடாது என்று தலைமையாசிரியர் அரவிந்திடம் மாணவர்களின் பெற்றோர்கள் முறையிட்டனர். அதனைத் தொடர்ந்து இடமாறுதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராஜேந்திரன் பகவானுக்கு வழங்கப்பட்ட உத்தரவைத் திரும்ப பெற முடியாது என்றார்.

மேலும் அவர், 'அந்தப் பள்ளியிலிருந்து வெளியேறி, அவருக்கு வழங்கப்பட்ட புதிய பள்ளிக்கு பணி மாறுதலாகி செல்வது அவருடைய விருப்பம்' என்று தெரிவித்தார். இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவள்ளி பகவானுக்கு தொலைபேசி மூலம் வாழ்த்துகள் தெரிவித்தார். திங்கள்கிழமை தன்னுடைய அலுவலகம் வந்து தன்னை நேரில் சந்திக்கும் படி கூறியுள்ளார். அன்று பகவானுக்கு விருது வழங்கப்படும் என தெரிகிறது.