ஜூன் 5ம் தேதி, 'நீட்' தேர்வு, 'ரிசல்ட்'

மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவு தேர்வு முடிவுகள், வரும், 5ம் தேதி வெளியாகின்றன.பிளஸ் 2 முடித்த மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மற்றும் இயற்கை மருத்துவம் போன்றவற்றில் சேர, மத்திய அரசின், நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.


அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில், நீட் தேர்ச்சி அடிப்படையில் மட்டுமே, மாணவர்கள் சேர்க்கையை நடத்த வேண்டும் என, மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.இந்த ஆண்டு, புதிய மாணவர் சேர்க்கைக்கான, நீட் நுழைவு தேர்வு, மே, 6ல் நடந்தது.நாடு முழுவதும், 136 நகரங்களில், 2,255 தேர்வு மையங்களில் நடந்த தேர்வில், 13 லட்சம் பேர் பங்கேற்றனர். 


இந்த தேர்வில், ஆங்கிலம், ஹிந்தியுடன் சேர்த்து, 11 மொழிகளில் வினாத்தாள் வழங்கப்பட்டது. தமிழகத்தில், 1.07 லட்சம் பேர், நீட் தேர்வில் பங்கேற்றனர். அவர்களில், 24 ஆயிரம் பேர், தமிழில் தேர்வை எழுதினர்.இந்த தேர்வில், விடைத்தாள் நகல் மற்றும் விடைக்குறிப்புகளை, சி.பி.எஸ்.இ., ஒரு வாரத்திற்கு முன் வெளியிட்டது. மாணவர்களின் கருத்துக்கள் அடிப்படையில், விடைத்தாள் திருத்தம் முடிவுக்கு வந்துள்ளது. 


வரும், 5ம் தேதி, தேர்வு முடிவுகளை வெளியிட, சி.பி.எஸ்.இ., முடிவு செய்துள்ளது.இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, இரண்டு நாட்களில் வெளியாகும் என, தெரிகிறது.தேர்வு முடிவு வெளியாவதை தொடர்ந்து, வரும், 8ம் தேதிக்குள், நீட் மதிப்பெண் அடிப்படையில், தரவரிசை பட்டியலும் வெளியாகும் என, சி.பி.எஸ்.இ., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.