264 புதிய பாடப்பிரிவுகள் அறிமுகப்படுத்தப்படும் முதல்-அமைச்சர் அறிவிப்பு

கடந்த 7 ஆண்டுகளில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் 56 அரசு மற்றும் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 4 அரசு பொறியியல் கல்லூரிகள், 19 அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலுள்ள 41 பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அனைத்தும் நடப்பு கல்வியாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளாக மாற்றப்படும். இதற்கென ஆண்டிற்கு 152 கோடியே 20 லட்சம் ரூபாய் தொடரும் செலவினம்.

2011-2012-ம் கல்வியாண்டு முதல் 2017-2018-ம் கல்வியாண்டு வரை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 1,232 புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. 2018-2019-ம் கல்வியாண்டில் 264 புதிய பாடப்பிரிவுகள் (68 இளங்கலை, 60 முதுகலை, 136 ஆராய்ச்சி) அறிமுகப்படுத்தப்படும். இப்பாடப் பிரிவுகளை கையாளுவதற்கு 683 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படும். இதற்கென அரசுக்கு தொடரும் செலவினமாக 68 கோடியே 46 லட்சம் ரூபாய் ஏற்படும். இப்பாடப் பிரிவுகளின் தேவைக்கென 324 வகுப்பறை கட்டிடங்கள், 50 ஆய்வகங்கள் மற்றும் பிற உட்கட்டமைப்பு வசதிகள் 62 கோடியே 75 லட்சம் ரூபாயில் அமைக்கப்படும்.

தமிழ்நாட்டில் பர்கூர், கோவை, காரைக்குடி, சேலம், திருநெல்வேலி மற்றும் வேலூரில் உள்ள 6 அரசு பொறியியல் கல்லூரிகளிலுள்ள அரசு விடுதிகளில் தலா 150 மாணாக்கர்கள் தங்குவதற்கு ஏதுவாக 3 நபர்கள் தங்கும் வசதியுள்ள 50 அறைகள் கொண்ட விடுதிகள் 37 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும். இவ்வாறு அவர் கூறினார்.