தமிழகத்தில் 35 ஆயிரம் தொடக்கப்பள்ளிகளும்,
9,800 நடுநிலைப்பள்ளிகளும், 5,800 உயர் நிலைப்பள்ளிகளும், 7,300
மேல்நிலைப்பள்ளிகளும் உள்ளன.
இந்தநிலையில் பள்ளிகளில் பாதுகாப்பு இல்லாத
நிலை உள்ளதா? என்று அறிய கமிட்டி அமைக்கும்படி பள்ளிக் கல்வித்துறைக்கு
ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இதையொட்டி பள்ளிக்கல்வித்துறை 7 பேர் கொண்ட
கமிட்டியை அமைத்துள்ளது. அதில் முதன்மை கல்வி அதிகாரி, தாசில்தார்,
பொதுப்பணித்துறை அதிகாரி, தீயணைப்புத்துறை அதிகாரி, தமிழ்நாடு மின்சார
வாரிய அதிகாரி, சுகாதாரத்துறை அதிகாரி, தொண்டு நிறுவனத்தின் சார்பில்
ஒருவர் உள்பட மொத்தம் 7 பேர் அந்த கமிட்டியில் உள்ளனர்.
இதுபற்றி பள்ளிக்கல்வி இயக்குனர் ரெ.இளங்கோவன் கூறியதாவது:-
ஐகோர்ட்டு உத்தரவுப்படி பள்ளிகளை ஆய்வு
செய்ய கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது. முதன்மை கல்வி அதிகாரி தலைமையில் உள்ள
குழுவினர் தமிழகத்தில் உள்ள பள்ளிகளை ஆய்வு செய்யலாம்.
அரசு, தனியார்(சி.பி.எஸ்.இ. உள்பட)
பள்ளிகளிலும் கூட ஆய்வு நடத்தலாம். இது குறித்து அனைத்து மாவட்ட முதன்மை
கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருக்கிறது. அந்த
சுற்றறிக்கையின்படி கமிட்டி ஆய்வு செய்யலாம்.
ஆய்வின்போது பள்ளியின் பெயர், பள்ளி
தொடங்கப்பட்ட வருடம், பள்ளிக்கூடத்தின் பரப்பளவு, கட்டிடத்தின் தன்மை
அதாவது அது கான்கிரீட் கூரையா? கூரையில் ஓடு போடப்பட்டுள்ளதா? அல்லது எந்த
வகை கூரை போடப்பட்டுள்ளது? அது எத்தனை வருடம் உறுதியாக இருக்கும்?
பள்ளியில் தீத்தடுப்பு சாதனங்கள் உள்ளனவா? மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப
போதுமான கழிவறைகள் உள்ளதா? மின் இணைப்பு பாதுகாப்பானமுறையில் உள்ளதா?
சுற்றுச்சுவர் பாதுகாப்பாக இருக்கிறதா? பள்ளிக்கூட வளாகம் மாணவர்கள்
பயன்பாட்டுக்கு ஏற்ப தூய்மையாக உள்ளதா? என்று பார்க்கவேண்டும்.
அவ்வாறு ஆய்வு செய்யும்போது பள்ளிகளில் பாதுகாப்பு இல்லை என்றால் அந்த பள்ளிக்கூடத்தை மூடநடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.