நீட் தேர்வு எழுத வரும் தமிழக மாணவர்களுக்கு உதவி மையங்கள்: கேரள முதல்வர் பினராயி விஜயன்

திருவனந்தபுரம்: கேரளாவுக்கு 'நீட்' தேர்வு எழுத வரும் தமிழக மாணவர்களுக்கு உதவி மையங்கள் அமைக்குமாறு அதிகாரிகளுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நாளை நடைபெற உள்ள 'நீட்' தேர்வில் தமிழக மாணவர்களுக்கு கேரளா, ராஜஸ்தான் மற்றும் சிக்கிம் உள்ளிட்ட சில மற்ற மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக மாணவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
அதே சமயம் தமிழக மாணவர்கள் சரியாக தேர்வு மையங்களுக்கு சென்று தேர்வு எழுதுவதற்கு என்று பல்வேறு தரப்பிலிருந்தும் வசதிகள் வந்த வண்ணம் உள்ளன. அதேசமயம் தமிழக அரசும் நீட் தேர்வு எழுத வெளி மாநிலங்களுக்கு செல்லும் மாணவர்களுக்கு இலவச ரயில், பேருந்து டிக்கெட் மற்றும் உதவித் தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
இந்நிலையில் கேரளாவுக்கு 'நீட்' தேர்வு எழுத வரும் தமிழக மாணவர்களுக்கு உதவி மையங்கள் அமைக்குமாறு அதிகாரிகளுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நீட் தேர்வு எழுதுவதற்காக தமிழகத்தில் இருந்து வரும் மாணவர்களுக்காக தனியாக உதவி மையங்கள் அமைக்கபட வேண்டும். அவை கொச்சி மற்றும் எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களின் ரயில்வே நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் உருவாக்கப்பட வேண்டும்.
இதுதொடர்பான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அந்த உத்தரவால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்காக பல்வேறு தனியார் அமைப்புகள் உதவத் தயாரான வேளையில் ஒரு மாநில அரசே முன்வந்துள்ள விஷயம் பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகி இருக்கிறது.