பள்ளி பாதுகாப்பு ஆய்வில், 'வசூல்'

பள்ளிகளில், பாதுகாப்பு வசதிகளை ஆய்வு செய்யும் அதிகாரிகளை, 'சரிக்'கட்ட, இடைத்தரகர்கள் பலர், லட்சக்கணக்கில் வசூல் வேட்டை நடத்தும் தகவல் வெளியாகி உள்ளது.மத்திய அரசு சட்டப்படி, கட்டட உறுதிச் சான்று, நகர்ப்புற வளர்ச்சித் துறை அங்கீகாரம், தீயணைப்பு துறையின் பாதுகாப்பு உத்தரவாதம், உள்ளாட்சி அமைப்புகளின் சுகாதார அனுமதி போன்றவைகளை, பள்ளிகள் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். 


தேசிய பாதுகாப்பு விதிகளை, பள்ளிகள் பின்பற்ற வேண்டும். பேரிடர் மேலாண்மைக்கான வசதிகள், பள்ளிகளில் இருக்க வேண்டும்.தமிழகத்தில், சி.பி.எஸ்.இ., - ஐ.சி.எஸ்.இ., உட்பட, அனைத்து தனியார் பள்ளிகளும், அரசு உதவி பெறும் பள்ளிகளும், இந்த பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிக்க வேண்டும். 'இந்த விதிகளின் அடிப்படையில், பள்ளிக் கல்வித் துறையில், அங்கீகாரம் பெற வேண்டும்; பெறாத பள்ளிகளை மூட வேண்டும்' என, பள்ளிக் கல்வி துறை முதன்மை செயலர், பிரதீப் யாதவ், ஏப்., 11ல் உத்தரவிட்டார்.

 7 பேர் குழுஇந்த விதிகளை ஆய்வு செய்ய, குழு அமைக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.இதை தொடர்ந்து, ஒவ்வொரு மாவட்டத்திலும், முதன்மை கல்வி அதிகாரியான, சி.இ.ஓ., மாவட்ட கல்வி அதிகாரிஆன, டி.இ.ஓ., மற்றும் தீயணைப்பு அதிகாரிகள், அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் அடங்கிய, ஏழு பேர் குழு, ஒரு வாரமாக, பள்ளிகளில் ஆய்வுகளை நடத்தி வருகிறது.இப்பணி தீவிரமாகியுள்ள நிலையில், இடைத்தரகர்கள் தலையீடு துவங்கியுள்ளது. பல பள்ளிகளுக்கு சாதகமாக அறிக்கை சமர்ப்பிக்கவும், ஆய்வுக் குழுவை சரிக்கட்டவும், இவர்கள் பணம் வசூல் செய்வதாக தெரிய வந்துள்ளது. சில தனியார் பள்ளி நிர்வாகிகள், பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், இடைத்தரகர்களாக செயல்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பள்ளிகளில், பாதுகாப்பு வசதிகள் இருந்தாலும், அந்த பள்ளிக்கு, ஒப்புதல் சான்று வழங்குவதற்கு, முதன்மை கல்வி அதிகாரி மற்றும் மெட்ரிக் ஆய்வாளர்கள் அலுவலகங்களில், வசூல் வேட்டை நடப்பதாகவும் கூறப்படுகிறது. கோரிக்கைஇது குறித்து, உரிய உத்தரவு பிறப்பித்து, வசூல் வேட்டையை தடுக்குமாறு, பள்ளிக் கல்வித் துறைக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.பாதுகாப்பு ஆய்வு என்பது, அரசு பிறப்பித்த உத்தரவாகும். இதை அதிகாரிகளுக்கு ஆதாயம் தேடும் நடவடிக்கைஆக மாற்ற, முயற்சி நடக்கிறது. அதை தடுத்து, மாணவர்கள் பாதுகாப்பை, உண்மையில் உறுதி செய்யும் நடவடிக்கையாக, இது அமைய வேண்டும் என, பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.