CBSE கணிதத்துக்கு மறுதேர்வு இல்லை

'பத்தாம் வகுப்பு கணித பாடத்துக்கு, மறுதேர்வு நடத்தப் போவதில்லை' என, மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., முடிவு செய்துள்ளது.சி.பி.எஸ்.இ., சார்பில் நடத்தப்பட்ட, 10ம் வகுப்பு கணித வினாத்தாளும், பிளஸ் 2 பொருளா தார வினாத்தாளும், முன் கூட்டியே, 'லீக்' ஆனதாக புகார் எழுந்தது. 


இதுகுறித்து, டில்லி போலீசார் விசாரித்து வருகின்றனர். இதையடுத்து, பிளஸ் 2 பொருளாதார பாடத்துக்கு மறு தேர்வு நடத்தப்படும் என, சி.பி.எஸ்.இ., அறிவித்தது. 'டில்லி, மற்றும் ஹரியானா மாநிலங்களில் மட்டும், 10ம் வகுப்பு கணித பாடத்துக்கு மறுதேர்வு நடத்தப்படும்' என, அறிவிக்கப்பட்டு இருந்தது. 

பிரதிபலிப்பு : இதையடுத்து, சி.பி.எஸ்.இ.,க்கு எதிராக, மாணவர்கள் போராட்டம் நடத்தினர். நீதிமன்றத்திலும் இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்நிலையில், சி.பி.எஸ்.இ., மற்றும் கல்வி அமைச்சக அதிகாரிகள் கூட்டம், நேற்று நடந்தது. அதில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து, அதிகாரிகள் கூறியதாவது: 


வினாத்தாள் வெளியான விவகாரத்தில், போதிய சாட்சியங்கள் கிடைக்கவில்லை. ஒரு, இ - மெயில் புகாரின் அடிப்படையில், லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் வகையில் முடிவு எடுக்க விரும்பவில்லை.மேலும், வினாத்தாள் வெளியானதன் பிரதிபலிப்பு, மாணவர்களின் விடைத் தாள்களில் காணப்படவில்லை. இந்நிலையில், மீண்டும் தேர்வு நடத்துவது சரியில்லை. எனவே, 10ம் வகுப்பு கணித பாடத்துக்கு மறுதேர்வு தேவையில்லை. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

தேர்வு முடிவு : இதற்கிடையே, 10ம் வகுப்பு கணித பாடத்தில், 'இன்டர்னல்' எனப்படும், உள்மதிப்பீட்டில் குறைவாகவும், பொதுத் தேர்வில் அதிகமாகவும் மதிப்பெண் பெறும் மாணவர்களின் தேர்வு முடிவு, கவனமுடன் ஆய்வு செய்யப்படவுள்ளதாக, சி.பி.எஸ்.இ., வட்டாரத்தில் கூறப்படுகிறது.