தேர்வுத்துறை சி.இ.ஓ.,வின் கீழ் இணைக்கப்படுமா?

கல்வித்துறையில் எஸ்.எஸ்.ஏ., ஆர்.எம்.எஸ்.ஏ., மாவட்ட கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (டயட்) இணைப்பை போல் தேர்வுத்துறையை அந்தந்த சி.இ.ஓ., அலுவலகங்களில் ஒரு பிரிவாக (செக்ஷன்) இணைக்க வேண்டும் என கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.கல்வித்துறையில் ஒரு இயக்குனரின் கீழ் இத்துறை ஒரு பிரிவாக செயல்படுகிறது. 


சென்னை, மதுரை, கோவை உட்பட 11 மண்டல அலுவலகங்கள் துணை இயக்குனர்களின் கீழ் செயல்படுகின்றன. மொத்தம் 800 ஊழியர் வரை உள்ளனர்.பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர் பெயர் பட்டியல் (நாமினல் ரோல்) தயாரிப்பது உட்பட அத்துறையின் முக்கிய பணிகள், கல்வித்துறை அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. முக்கிய பணியாக ஆசிரியர் சான்றிதழ்களின் உண்மை தன்மையை ஆய்வு செய்வது மட்டும் இருந்தது. அதுவும் சி.இ.ஓ.,க்களின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.தற்போது 'டூப்ளிகேட்' மதிப்பெண் சான்று வழங்குவது, பொது தேர்வில் மாணவருக்கான எழுதுபொருள் வழங்குவது என குறிப்பிட்ட சில பணிகள் மட்டும் இத்துறை அலுவலர்கள் மேற்கொள்கின்றனர்.

இதுகுறித்து கல்வித்துறை அலுவலர்கள் கூறியதாவது:தேர்வுத்துறையின் பல பணிகள் எங்கள் வசம் ஒப்படைக்கப்பட்டு விட்டது. குறிப்பாக, சென்னை தேர்வுத்துறையில் மொத்தம் 60ல் 17 'செக்ஷன்'கள் ஆசிரியர் சான்றிதழின் உண்மை தன்மையை ஆய்வு செய்ய ஒதுக்கப்பட்டன. அப்பணியை சி.இ.ஓ.,க்கள் வசம் ஒப்படைத்த பின் அப்பிரிவு ஊழியர் போதிய வேலையின்றி உள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. எனவே அந்தந்த சி.இ.ஓ., அலுவலகங்களின் கீழ் ஒரு செக்ஷனாக இத்துறையை இணைத்தால் அரசு நிதி வீணடிக்கப்படுவதை தடுக்கலாம், என்றார்.