இலவச, 'அம்மா வை பை' சேவை இன்று துவக்கம்

மெரினா, மதுரை உட்பட, தமிழகத்தின், ஐந்து இடங்களில், இலவச, 'அம்மா வை பை' வசதி, இன்று முதல் செயல்பாட்டுக்கு வருகிறது.

'தமிழகத்தில், முக்கிய பஸ் நிலையங்கள், வணிக வளாகங்கள், பூங்காக்கள் போன்ற இடங்களில், வை பை என்ற, கம்பியில்லா இணையதள சேவை வழங்கப்படும்' என, முன்னாள் முதல்வர், ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

இதன்படி, முதற்கட்டமாக, 50 இடங்களில், இலவச, 'வை பை' சேவையை, செயல்படுத்த, தமிழ் நாடு அரசு கேபிள், 'டிவி' நிறுவனம் ஈடுபட்டுள்ளது. முதற்கட்டமாக இன்று, ஐந்து இடங்களில், வை பை சேவை, செயல்பாட்டிற்கு வருகிறது.

இது குறித்து, அதிகாரி ஒருவர் கூறியதாவது:இலவச, 'அம்மா வை பை' சேவை, சென்னை, மெரினா உழைப்பாளர் சிலை, மதுரை, திருச்சி, சேலம், கோவை ஆகிய பஸ் நிலையங்கள் என, ஐந்து இடங்களில், இன்று முதல் செயல்பாட்டுக்கு வருகிறது. முதல், 20 நிமிடங்கள் இந்த சேவையை, இலவசமாக பயன்படுத்தலாம். 
அதன் பின், ஒரு மணி நேரத்துக்கு, 10 ரூபாய் வீதம், இரண்டு மணி நேரம் இந்த சேவையை தொடர முடியும்.வை பை ஆன் செய்ததும், ஒரு திரை தோன்றும், அதில், பெயர், மொபைல் நம்பர், இ மெயில் முகவரியை பதிவு செய்ததும், நம்பருக்கு, ரகசிய எண் வரும். அந்த ரகசிய எண்ணை பதிவு செய்து, வை பை சேவையை பயன்படுத்தலாம். 20 நிமிடங்கள் முடிந்ததும், வை பை இணைப்பு, தானாக துண்டிக்கப்படும். அதன் பின், கட்டணம் செலுத்தி, சேவை பெறலாம். கட்டணத்தை, 'நெட் பேங்கிங்' வழியாகவும், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகளை பயன்படுத்தியும் செலுத்தலாம்.இவ்வாறு அவர் கூறினார்.