பாதுகாப்பு துறையை மேம்படுத்த மாணவர்கள் ஆராய்ச்சி உதவட்டும் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் பேச்சு

ராணுவ தளவாட கண்காட்சியையொட்டி நடத்தப்பட்ட முப்படைகளில் ஏற்படும் தொழில்நுட்பம் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பான தேசிய அளவிலான போட்டிகள் அறிவிக்கப்பட்டிருந்தன. அந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பாராட்டு சான்றிதழ்களை ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் வழங்கினார்.

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுத்தொகை அவர்களின் வங்கிக்கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது.

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கி நிர்மலா சீதாராமன் பேசியதாவது:-

ராணுவ தளவாட கண்காட்சி நடத்த திட்டமிட்டபோது, குறுகிய காலம் மட்டுமே இருந்தது. இந்த போட்டிகளுக்கு எவ்வளவு பேர் விண்ணப்பிப்பார்கள் என்ற கேள்வி முதலில் எழுந்தது. குறைந்த எண்ணிக்கையில் மாணவர்கள் விண்ணப்பித்தாலும் பரவாயில்லை என்ற எண்ணத்துடனே போட்டிகளை நடத்த முடிவு செய்தோம். ஆனால் குறுகிய காலகட்டத்தில் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் வந்தது எங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

நாடு முழுவதும் இருந்து 4 பிரிவுகளில் 492 பேர் போட்டியில் பங்கேற்க விண்ணப்பித்தனர். மாணவர்கள் தங்களின் பாடத்திட்டத்தை படித்துக்கொண்டே கல்லூரி 2-ம் ஆண்டு முதல் ஆராய்ச்சியில் ஈடுபடும் மாணவர்கள் வரை கலந்துகொண்டது பாராட்டுக்குரியது.

இந்த கண்காட்சியின் மிக முக்கியமான நிகழ்வு என்பது இந்த போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்றது தான். போட்டிகளில் வெற்றி பெறாதவர்கள் வருத்தப்பட வேண்டாம்.

ஆர்வத்துடன் நீங்கள் கலந்துகொண்டதே வெற்றிக்கு சமம். மாணவர்கள் மிகப்பெரிய அளவில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும். உங்களின் ஆராய்ச்சிப்பணிகளுக்கு பாதுகாப்புத்துறை எப்போதும் துணை நிற்கும். பாதுகாப்புத்துறை அதிகாரிகளுடன் எப்போதும், தொடர்பில் இருங்கள். உங்கள் ஆராய்ச்சி இந்திய பாதுகாப்புத்துறையை மேம்படுத்த உதவட்டும்.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.

இதில் கர்நாடக மாநிலம் சூதர்கல் தேசிய தொழில்நுட்ப கழகத்தின் என்ஜினியரீங் பிரிவைச் சேர்ந்த ராஜெனேஷ் ஆசாரியா மற்றும் தீபனேஷ் ஜெனா ஆகியோர் முதல் பரிசாக ரூ.50 ஆயிரத்தை பெற்றனர். 2-வது பரிசான ரூ.30 ஆயிரத்தை சென்னையைச் சேர்ந்த கணினி பொறியாளர் அன்பு ரபிந்திரா, கோபி பழனி, கார்த்திக் பஞ்சமூர்த்தி, செந்தில் குமார், சுனில் ஜோசப், விக்னேஷ், சிதம்பரதாணு ஆகியோர் பெற்றனர். 3-வது பரிசான ரூ.10 ஆயிரத்தை கர்நாடகத்தை சேர்ந்த மன்தீப் துரா பெற்றார்.

ஆறுதல் பரிசாக அகாஷ் சுனில் காலே, விவேக் யாதவ், டி.ஆர்.ஆதித்தன், நித்திஷ் குமார், அசுதேஷ் சசி காந்த் நிகாம், அவ்யா குருஜி ராவ், சீத்தாபள்ளி லட்சுமி, அமுர்தா, டி.வி.உமா, யாஷ் தீபக் பாட்டில், கோபிகா துரைசாமி, நந்தன் கே.சின்கா, எஸ்.வருண்குமார் உள்ளிட்ட 12 பேருக்கு ரூ.5 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

ராணுவ கண்காட்சியை, புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி நேற்று பார்வையிட்டார். அவர் நிருபர்களிடம் பேசுகையில், “ராணுவ கண்காட்சி, உள்நாட்டு உற்பத்தியை பெருக்க வேண்டும், நம் நாட்டில் தொழில்வளத்தை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சிக்கு பிறகு, எவ்வளவு வேலைவாய்ப்புகள் உருவாகும், எவ்வளவு தொழில் முதலீடுகள் கிடைக்கும் என்று, நாம் பொருத்திருந்து பார்ப்போம்” என கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததே, பிரதமர் வருகையை, நான் புறக்கணித்ததற்கு காரணம்” என கூறினார்.

நாராயணசாமி உடன் புதுச்சேரி மாநில சபாநாயகர் வைத்திலிங்கம் கண்காட்சியை பார்வையிட்டார்.