'தேர்வு பாடத்திட்டம் குறித்தும் தெளிவு பெறலாம்' - மாணவர்களுக்கான உதவி மையம்

'மாணவர்களுக்கான உதவி மையம் துவக்கப்பட்ட ஆறு நாட்களில், 16 ஆயிரத்து, 615 பேர், ஆலோசனை பெற்றுள்ளனர். நாளைய தேர்வு குறித்தும், முதல் நாளில் சந்தேகங்கள் பெறலாம்' என, சேவை மைய அதிகாரிகள் கூறினர்.


தமிழக மாணவர்களின் சந்தேகங்களை தீர்க்கவும், மனநலம் சார்ந்த ஆலோசனைகள் வழங்கவும், '14417' என்ற, கட்டணமில்லா தொலைபேசி எண்ணுடன், சேவை மையத்தை, பள்ளிக்கல்வித் துறை துவக்கி உள்ளது. இந்த மையத்தில், '104' மருத்துவ சேவை மையத்தின், மனநல ஆலோசகர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.இது குறித்து, சேவை மைய அதிகாரிகள் கூறியதாவது:

மாணவர் சேவை மையம் துவக்கப்பட்ட, ஆறு நாட்களில், 16 ஆயிரத்து, 615 மாணவர்கள் மற்றும் பெற்றோர் பயன் பெற்றுள்ளனர். தற்போது, மாலை, 4:00 மணி முதல், 7:00 மணி வரை, பாடத்திட்டம் தொடர்பான மாணவர்களின் சந்தேகங்கள், தீர்க்கப்பட்டு வருகின்றன.இதில், நாளைய தேர்வு குறித்த சந்தேகங்களை, மாணவர்கள், முதல்நாளே கேட்டு தெளிவு பெறலாம். இதற்காக, சேவை மையத்தில், பாட வாரியான ஆசிரியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.