'ஜிப்மர்' நுழைவு தேர்வு பதிவு: நாளை துவக்கம்

புதுச்சேரி, 'ஜிப்மர்'மருத்துவ கல்லுாரியில் சேர்வதற்கான, நுழைவு தேர்வுக்கு, 'ஆன்லைன்' பதிவு, நாளை துவங்குகிறது. மருத்துவ படிப்பில் சேர, மத்திய அரசின்
சி.பி.எஸ்.இ., நடத்தும், 'நீட்' நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். ஆனால், மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்படும், எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் கல்வி நிறுவனங்களில், மருத்துவ படிப்பில் சேர, தனியாக நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. வரும் கல்வி ஆண்டில், மாணவர் சேர்க்கைக்கான, எய்ம்ஸ் நுழைவு தேர்வில் பங்கேற்க, நேற்றுடன் ஆன்லைன் பதிவு முடிந்தது. புதுச்சேரி, ஜவஹர்லால் நேரு முதுநிலை மருத்துவ படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான, ஜிப்மர் கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., படிக்க, ஜூன், 3ல் நுழைவு தேர்வு நடக்கிறது. இதற்கான, ஆன்லைன் பதிவு, நாளை துவங்குகிறது. பிளஸ் 2 முடிக்க உள்ள மாணவர்கள், முடித்தவர்கள், நுழைவு தேர்வில் பங்கேற்கலாம். www.jipmer.puducherry.gov.in என்ற இணையதளத்தில், ஏப்., 13 வரை, பதிவு செய்யலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.