எஸ்.எஸ்.எல்.சி. வினாத்தாள் காப்பகத்தில் பாதுகாப்பு போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு

தூத்துக்குடியில் எஸ்.எஸ்.எல்.சி. வினாத்தாள் காப்பகத்தில் பாதுகாப்புக்கு சென்ற போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகம் முழுவதும் 16-ந் தேதி முதல் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் தொடங்குகிறது. இதற்கான வினாத்தாள் தூத்துக்குடி சி.வ. அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்துக்கு நேற்று மதியம் கொண்டுவரப்பட்டது. அங்கிருந்து மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி, திருச்செந்தூர், கோவில்பட்டி, விளாத்திகுளம், புதுக்கோட்டை, சாத்தான்குளம் ஆகிய 6 இடங்களில் இருக்கும் வினாத்தாள் காப்பகங்களுக்கு வினாத்தாள்கள் பிரித்து அனுப்பப்பட்டன.

இந்த வினாத்தாள்களை வேனில் பாதுகாப்பாக கொண்டு செல்வதற்காக, தூத்துக்குடி ஆயுதப்படையை சேர்ந்த துப்பாக்கி ஏந்திய போலீசார் 6 பேர் வரவழைக்கப்பட்டு இருந்தனர். அவர்களில் 5 வினாத்தாள் காப்பகத்துக்கு வினாத்தாள் கட்டுகளை ஏற்றிக்கொண்டு தலா ஒரு போலீஸ்காரர் வீதம் சென்று விட்டனர்.

தூத்துக்குடி வினாத்தாள் காப்பகம் சி.வ. அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்திலேயே அமைந்து உள்ளதால், உடனடியாக வினாத்தாள்கள் காப்பகத்துக்குள் வைக்கப்பட்டன. பாதுகாப்பு பணியில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஆயுதப்படை போலீஸ்காரர் ஆனந்தகிருஷ்ணன் (வயது 27) ஈடுபட்டிருந்தார்.

வினாத்தாள் கட்டுகள் பாதுகாப்பாக வைக்கப்பட்ட பிறகு, அதற்கான ஒப்புதல் கடிதம் பெறுவதற்காக ஆனந்தகிருஷ்ணன் அந்த பகுதியில் உள்ள வேப்பமரத்தின் கீழ் அமர்ந்து இருந்தார். அப்போது, தான் வைத்து இருந்த துப்பாக்கியின் விசையை(டிரிக்கர்) எதிர்பாராதவிதமாக அழுத்திவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் பயங்கர சத்தத்துடன் துப்பாக்கி சுட்டதில் குண்டு வானத்தை நோக்கி பாய்ந்தது. இதனால் பள்ளிக்கூடத்தில் இருந்த ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். அங்கு பரபரப்பு ஏற்பட்டது.