மே 8 ல் கோட்டை முற்றுகை : ஜாக்டோ- ஜியோ முடிவு

'கோரிக்கையை வலியுறுத்தி ஜாக்டோ -ஜியோ சார்பில் மே 8 ல் கோட்டை முன் முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது' என பட்டதாரி ஆசிரியர் கழக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல், தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம், பணி நிரந்தரம், 21 மாத நிலுவை தொகை வழங்குதல், ஆசிரியர் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் ஊதிய முரண்பாடு களைதல்
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்., 21 முதல் 24 வரை ஜாக்டோ -ஜியோ அமைப்பினர் சென்னையில் தொடர் மறியலில் ஈடுபட்டனர். பிப்., 26 ல் அரசு பேச்சுக்கு அழைப்பதாக கூறியதால் போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால் இதுவரை அழைக்க வில்லை.இதுகுறித்து பட்டதாரி ஆசிரியர் கழக பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மண்ட் கூறியதாவது:தேர்வுகள் துவங்கியுள்ள நிலையில் மாணவர் நலன் கருதி போராட்டத்தை தவிர்த்தோம். தற்போது மாணவர்கள் பாதிக்காத வகையில் மார்ச் 24ல் மாவட்ட தலைநகரங்களில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலம் நடத்த ஜாக்டோ -ஜியோ முடிவு செய்துள்ளது. அதன்பின்னும் அரசு பேச்சுக்கு அழைக்காவிட்டால் மே 8 ல் சென்னை கோட்டை முன் முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம், என்றார்.