'செட்' தேர்வு : 41 ஆயிரம் பேர் பங்கேற்பு

பேராசிரியர் பணிக்கான, 'செட்' தகுதித்தேர்வு, தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது. இதில், 41 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.கல்லுாரிகள், பல்கலைகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர, மத்திய அரசின் தேசிய தகுதி தேர்வான, 'நெட்' அல்லது மாநில அளவிலான, 'செட்' தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். தமிழகத்தில், தெரசா மகளிர் பல்கலை சார்பில், நேற்று மாநில அளவிலான, செட் தேர்வு நடந்தது. 


இந்த தேர்வுக்கு, 44 ஆயிரம் பேர் விண்ணப்பப் பதிவு செய்திருந்தனர்.நேற்றைய தேர்வுக்கு, சென்னையில், 11 உட்பட, தமிழகம் முழுவதும், 54 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. மாநிலம் முழுவதும், 41 ஆயிரம் பேர் தேர்வில் பங்கேற்றனர்.'விரைவில், வினாத்தாளுக்கான தோராய விடைக்குறிப்பு வெளியிடப்படும். 'அதில், தேர்வர்களின் கருத்து கேட்கப்பட்டு, விடை குறிப்புகள் இறுதி செய்யப்படும். பின், விடைத்தாள் திருத்தம் துவங்கும்' என, பல்கலை பதிவாளரும், தேர்வு குழு உறுப்பினர் செயலருமான, பேராசிரியை, சுகந்தி தெரிவித்துள்ளார்.