பாலிடெக்னிக் விரிவுரையாளர், கல்லூரி உதவி பேராசிரியர் உள்ளிட்ட 3,030 காலி பணியிடங்களுக்கான தேர்வு

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் செயல்படுகிறது. இந்த வாரியம் மூலம் ஆசிரியர்கள் பணி நிரப்பப்படுகிறது. சமீபத்தில் 1,065 பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் காலிப்பணி இடங்களுக்கு தேர்வு நடத்தி அதில் முறைகேடு நடந்ததால் அந்த தேர்வை ரத்து செய்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது.

இந்நிலையில் வருடாந்திர தேர்வு பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று அறிவித்தது. இதன் மூலம் 3 ஆயிரத்து 30 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

பாலிடெக்னிக் விரிவுரையாளர்

25 வேளாண்மை பயிற்றுவிப்போர் பதவிக்கு ஏப்ரல் முதல் வாரத்தில் அறிவிப்பு வருகிறது. இதற்கான எழுத்து தேர்வு ஜூலை 14-ந் தேதி நடைபெறும். தேர்வு முடிவு ஆகஸ்டு மாதம் வெளியிடப்படுகிறது.

சமீபத்தில் ரத்து ஆன பாலிடெக்னிக் விரிவுரையாளர் காலி பணியிடங்கள் 1,065-க்கு அறிவிப்பு மே முதல் வாரத்தில் வெளியிட்டு ஆகஸ்டு 4-ந் தேதி தேர்வு நடக்கிறது. தேர்வு முடிவு செப்டம்பரில் வெளியிடப்படும்.

உதவி பேராசிரியர்

கலை அறிவியல் கல்லூரிகளில் 1,883 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு மே முதல் வாரத்தில் அறிவிப்பு வெளியிட்டு சான்றிதழ் சரிபார்த்தல் ஜூன் 2-வது வாரத்தில் நடைபெறும். ஜூலை மாதத்தில் முடிவு வெளியாகிறது.

57 உதவி தொடக்க கல்வி அதிகாரி பணியிடங்களுக்கு ஜூன் முதல் வாரத்தில் அறிவிப்பு வெளியாகி, செப்டம்பர் 15-ந் தேதி தேர்வு நடக்கிறது. இதன் முடிவு அக்டோபரில் வெளியிடப்படும்.