பிளஸ்2 தேர்வு இன்று துவக்கம்

பிளஸ் 2 பொதுத் தேர்வு, இன்று துவங்குகிறது. மே, 16ல், 'ரிசல்ட்' வெளியிடப்படுகிறது.


தமிழக பாடத்திட்டத்தில், பிளஸ் 2 பொதுத் தேர்வு, இன்று துவங்குகிறது; ஏப்., 5ல் முடிகிறது. தேர்வு முடிவுகள், மே, 16ல் வெளியிடப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. புதுச்சேரியில், 38 உட்பட, 2,794 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 6,903 பள்ளிகளைச் சேர்ந்த, 8.67 லட்சம் மாணவர்கள் தேர்வில் பங்கேற்கின்றனர். இவர்களில், 4.63 லட்சம் பேர் மாணவியர். 40 ஆயிரம் தனித் தேர்வர்களில், இரு திருநங்கையரும் அடங்குவர்.

அறிவியல் பிரிவில், 2.98 லட்சம் மாணவியர் உட்பட, 5.47 லட்சம் பேர்; வணிகவியல், 2.42 லட்சம்; கலைப்பிரிவு, 14 ஆயிரம்; தொழிற்கல்வியில், 60 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகின்றனர். 5.32 லட்சம் பேர், தமிழ் வழியில் படித்து தேர்வு எழுதுகின்றனர்.

சென்னையில், 407 பள்ளிகளைச் சேர்ந்த, 27 ஆயிரம் மாணவியர் உட்பட, 50 ஆயிரம் பேர் தேர்வு எழுத உள்ளனர். இவர்களுக்கு, 156 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. புதுச்சேரி யில், 147 பள்ளிகளைச் சேர்ந்த, 15 ஆயிரம் பேர், 38 தேர்வு மையங்களில் தேர்வு எழுதுகின்றனர்.

சென்னை, வேலுார், கடலுார், சேலம், கோவை, பாளையங்கோட்டை, மதுரை, திருச்சி சிறை கைதிகளுக்காக, சென்னை, புழல் சிறையில், தேர்வு மையம் அமைக்கப்பட்டு உள்ளது.இதில், 103 ஆண் கைதிகள் தேர்வு எழுதுகின்றனர். மாற்றுத்திறனாளிகளுக்காக, கூடுதலாக, ஒரு மணி நேரம் தேர்வு எழுத சலுகை தரப்பட்டுள்ளது. 2,380 பேருக்கு, இந்த சலுகை உண்டு.

தேர்வின் போது சோதனையிட, 4,000 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. மாணவியரை, பறக்கும் படையில் உள்ள பெண் கண்காணிப்பாளர்கள் தான் சோதனையிட வேண்டும்.தேவையின்றி மாணவர்களை சந்தேகப்பட்டு, அவர்கள் தேர்வு எழுதும் நேரத்தை வீணாக்கி விடக் கூடாது என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது. காப்பி அடித்தல், ஆள்மாறாட்டம் போன்ற முறைகேடுகளை கண்டறிந்தால், உடனே, அவர்களிடம் வாக்குமூலம் வாங்கி, உரிய ஆவணங்களுடன், தேர்வு மைய கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும்.

காப்பி அடித்தவர்களை மன்னித்து விடுதல் கூடாது. அதே நேரம், மாணவர்களை முறைகேடு புகாரில் பிடித்தால், அந்த முறைகேட்டை ஆதாரத்துடன் நிரூபிக்கும் வகையில், பறக்கும் படையினரின் நடவடிக்கை இருக்க வேண்டும் என்றும்தெரிவிக்கப்பட்டுள்ளது.