சிந்தனையை சோதிக்கும் கேள்விகள் : பிளஸ் 1ல், 'சென்டம்' பெறுவதில் சிக்கல்!!!

தமிழகத்தில், பிளஸ் 1 பொதுத் தேர்வு நேற்று துவங்கியது. இதில், சில வினாக்கள்
கடினமாக இருந்ததால், 'சென்டம்' கிடைக்க வாய்ப்பில்லை என, மாணவர்கள் தெரிவித்தனர்.


பிளஸ் 1 வகுப்புக்கு, இந்த ஆண்டு முதல், பொதுத் தேர்வு அறிமுகமாகி உள்ளது. நேற்று துவங்கிய இத்தேர்வில், 8.63 லட்சம் மாணவ - மாணவியர் பங்கேற்றனர். நேற்று, தமிழ் முதல் தாள் தேர்வு நடந்தது. அகமதிப்பீட்டுக்கு, 10 மதிப்பெண் ஒதுக்கப்படுவதால், 90 மதிப்பெண்களுக்கு மட்டும் வினாத்தாள் வழங்கப்பட்டது.காலை, 10:00 மணி முதல், 12:45 மணி வரை மாணவர்கள் தேர்வு எழுதினர். வினாத்தாளை வாசிக்கவும், சுய விபரங்களை பூர்த்தி செய்யவும், முதல், 15 நிமிடங்கள் வழங்கப்பட்டன; மீதம் உள்ள, 2:30 மணி நேரத்தில், விடை எழுத அவகாசம் தரப்பட்டது. வினாக்களுக்கு உரிய பதிலை எழுத, மாணவர்களுக்கு போதிய நேரம் கிடைத்தது.தேர்வெழுதிய மாணவர்கள் கூறுகையில், '10ம் வகுப்பில், பொது தேர்வை எழுதியுள்ளோம்.'பிளஸ் 1ல் அரையாண்டு மற்றும் திருப்புதல் தேர்வுகளை, பொது தேர்வு போல் எழுதினோம். அதனால், இந்த தேர்வில், சிரமம் தெரியவில்லை. வினாக்கள் எளிமையாக இருந்தன. சில, ஒரு மதிப்பெண் வினாக்கள், பாடங்களின் உள்பகுதியில் இருந்து கேட்கப்பட்டுள்ளன' என்றனர்.தமிழ் ஆசிரியர்கள் கூறியதாவது:வினாத்தாளில், கடினமான கேள்விகள் இல்லை. ஆனால், மொழிப் பாடம் என்பதால், அவற்றில் முழு மதிப்பெண் வழங்க சில, 'ட்விஸ்ட்' கேள்விகள் இருக்கும்.அப்படித்தான், பிளஸ் 1 தேர்விலும், மாணவர்களின் சிந்தனை மற்றும் புரிந்து படிக்கும் திறனை சோதிக்கும் வகையில், ஐந்துக்கும் மேற்பட்ட, ஒரு மதிப்பெண் கேள்விகள் இடம் பெற்றுள்ளன.இவ்வாறு அவர்கள் கூறினர்.