பதவி உயர்வில் இழுபறி : கல்வித்துறையில் அதிருப்தி - DINAMALAR

பள்ளிக்கல்வித்துறையில் ஏற்படும் காலிப்பணியிடங்களை நிரப்ப, பதவி உயர்வு வழங்காமல் இழுப்பதால், பணப்பலன்கள் பெறுவதில் தாமதம் நீடிப்பதாக, ஊழியர்கள் புலம்புகின்றனர்.தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மற்றும்
கல்வித்துறை அலுவலகங்களில், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, அலுவலக பணியாளர்கள் பணி புரிகின்றனர். இவர்களுக்கு, ஆசிரியர் களை போல, ஆண்டுதோறும் மே மாதம் கவுன்சிலிங் நடத்தி, பதவி உயர்வு வழங்கப்படுவது இல்லை. மேலும், கற்பித்தல் பணியில் ஈடுபடுவோர், எந்த மாதத்தில் பணி ஓய்வு பெற்றாலும், மே வரை, நீட்டிப்பு வழங்கப்படுவதால், காலியிடங்கள் நிரப்புவதிலும், சிக்கல் இல்லை.அலுவலக பணியாளர்களை பொறுத்தமட்டில், பணி ஓய்வு பெற்றவுடன், சீனியாரிட்டி அடிப்படையில், பதவி உயர்வு வழங்கப்பட்டது. கடந்தாண்டு, மே மாதத்துக்கு பின், பதவி உயர்வு சலுகைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தற்போது, தமிழகம் முழுக்க, 85 கண்காணிப்பாளர், 15 நேர்முக உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்களுக்கு, உரிய காலத்தில் பதவி உயர்வு அளிக்காததால், பணப்பலன்கள் பெறுவதிலும் தாமதம் நீடிப்பதாக, ஊழியர்கள் புலம்புகின்றனர்.பள்ளிக்கல்வித்துறை அமைச்சு பணியாளர் சங்க மாநில உயர்மட்ட குழு தலைவர், பால்ராஜ் கூறுகையில், ''பணி அனுபவம் பொறுத்து, காலிப்பணியிடங்கள் நிரப்பும்போது, கீழ்மட்ட பணியாளர்கள் வரை, பதவி உயர்வு பெறுவர். இதனால், மாதச்சம்பளமும் அதிகரிக்கும். ''மேலும், பதவி உயர்வுக்கு பின் ஏற்படும் காலிப் பணியிடங்களுக்கு, போட்டித்தேர்வு அறிவிப்பதால், புதிய வேலைவாய்ப்பு களை உருவாக்கலாம். ''கற்பித்தல் போல, அலுவலக பணிகளுக்கும், காலிப்பணியிடங்களை முழுமையாக நிரப்பினால் தான், நிர்வாக பணிகள் விறுவிறுப்பாக நடக்கும்,'' என்றார்.