பிழையில்லாத வினாத்தாள் : தேர்வுத்துறைக்கு அறிவுறுத்தல்

'பொதுத்தேர்வு வினாத்தாள்களில், பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகள், தவறான கேள்விகள் இடம் பெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்' என, தேர்வுத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள், மார்ச்சில் துவங்குகின்றன. அதற்கான ஏற்பாடுகள், இறுதி கட்டத்தில் உள்ளன. வினாத்தாள்கள், அடுத்த வாரம் இறுதி செய்யப்பட்டு, அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பும் பணி துவங்கும்.


கடந்த ஆண்டில், வேதியியல், பொருளியல், உயிரியல், வேளாண் அறிவியல், ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்களுக்கான, வினாத்தாள்களில் விடைக்குறிப்புகள் தவறாக இருந்தன. 


இரண்டு வகை விடைக்குறிப்புகள் வழங்கப்பட்டதால், மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். பின், விடைத்தாள் திருத்தத்தின் போது, கருணை மதிப்பெண் வழங்கி, அதை சரிக்கட்டினர்.


எனவே, இந்த ஆண்டு தேர்வுகளில், வினாத்தாள்களில் பிழைகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும், பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகளை தவிர்க்க வேண்டும் என்றும், அரசு தேர்வுத்துறைக்கு, பள்ளிக் கல்வித்துறை செயலர் அறிவுறுத்தியுள்ளார்.


'கற்பிக்கும் மொழி வாரியாக, சரியான எண்ணிக்கையில் வினாத்தாள்கள் தயாரிக்க வேண்டும். மாணவர்களின் உண்மையான கல்வித் திறனை சோதிக்கும் வகையில், வினாத்தாள்கள் இருக்க வேண்டும். வினாத்தாள்களின் ரகசியத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும்' என்றும், ஆலோசனைகள் வழங்கப்பட்டு உள்ளன.