11ம் தேதி, 'குரூப் - 4' தேர்வு : 20 லட்சம் பேர் எழுதுகின்றனர்

அரசு துறைகளில், கிராம நிர்வாக அதிகாரி உட்பட, எட்டு வகை பதவி களில், 9,351 இடங்களை நிரப்ப, வரும், 11ம் தேதி, குரூப் - 4 தேர்வு நடக்கிறது. இத்தேர்வை, 20 லட்சம்
பேர் எழுதுகின்றனர்.அரசு துறைகளில், கிராம நிர்வாக அதிகாரி பதவியில், 494; இளநிலை உதவியாளர் பணியில், 4,301; தட்டச்சர் பணியில், 3,463 என, எட்டு வகை பதவிகளில், 9,351 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான, குரூப் - 4 போட்டி தேர்வு, வரும், 11ம் தேதி நடக்கிறது.இத்தேர்வுக்கான கல்வித்தகுதி, 10ம் வகுப்பு தேர்ச்சியாகும். தேர்வை, 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதுகின்றனர். குரூப் - 4 தேர்வுகளில், இதுவரை, 12 லட்சம் பேர் மட்டுமே பங்கேற்றனர். இந்த தேர்வில், கிராம நிர்வாக அதிகாரி பதவியும் சேர்க்கப்பட்டுள்ளதால், தேர்வர்களின் எண்ணிக்கை, 20 லட்சத்தை தாண்டியுள்ளது.மாநிலம் முழுவதும், 3,500 மையங்களில் தேர்வு அறைகள் அமைக்கப்பட உள்ளன; 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தேர்வு பணியில் ஈடுபட உள்ளனர். பெரும்பாலான தேர்வு மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. அதேபோல், தேர்வு அறைகளில், வீடியோ பதிவும் எடுக்கப்பட உள்ளது.தேர்வுக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ளதால், பல்வேறு தனியார் பயிற்சி மையங்கள், தனியார் அறக்கட்டளை நிறுவனங்கள் உள்ளிட்டவை, குரூப் - 4 தேர்வுக்கு சிறப்பு பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. பல்வேறு மையங்களில், தினமும் மாதிரி தேர்வு வைத்து, தேர்வர்கள் தயார் செய்யப்படுகின்றனர்.