JEE தேர்வுக்கு 11.44 லட்சம் விண்ணப்பம்

தேசிய கல்வி நிறுவனங்களில், இன்ஜினியரிங் படிப்பில் சேர்வதற்கான, ஜே.இ.இ., நுழைவு தேர்வுக்கு, 11.44 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், தேசிய உயர்கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி.,க்களில், பி.டெக்., இன்ஜினியரிங் படிப்பில் சேர, நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
இதற்காக, ஜே.இ.இ., என்ற, ஒருங்கிணைந்த நுழைவு தேர்வு, மத்திய அரசால் நடத்தப்படுகிறது. வரும் கல்வி ஆண்டில் மாணவர்களை சேர்ப்பதற்கான, முதற்கட்ட நுழைவு தேர்வு, ஏப்., 8ல், எழுத்து தேர்வாக நடக்கும். கணினி வழி தேர்வு, ஏப்., 16ல் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பதிவு, 2017 டிச., 1ல் துவங்கி, கடந்த, 1ல் முடிந்தது.

இந்த ஆண்டு, 11.44 லட்சம் பேர் பதிவு செய்துள்ளதாக, தேர்வை நடத்தும், சி.பி.எஸ்.இ., வட்டாரம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு, 50 ஆயிரம் பேர் குறைவாக விண்ணப்பித்து உள்ளதாக கூறப்படுகிறது. தமிழக பாடத்திட்ட மாணவர்களை பொறுத்தவரை, மிக குறைவாகவே, ஜே.இ.இ., தேர்வுக்கு விண்ணப்பிப்பர். அதேபோல், இந்த ஆண்டும் மிக குறைவாகவே விண்ணப்பித்துள்ளதாகவும், தமிழக மாணவர்கள் மத்தியில், ஐ.ஐ.டி.,யில் படிக்கும் ஆர்வம் குறைவாக உள்ளதாகவும், ஐ.ஐ.டி., வட்டாரங்கள் தெரிவித்தன.