தனியார் இன்ஜி., பல்கலைகளுக்கு ஏ.ஐ.சி.டி.இ., புது கட்டுப்பாடு

'தனியார் இன்ஜினியரிங் பல்கலைகளில், மாணவர்களை சேர்க்க, அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., ஒப்புதல் பெற வேண்டும்' என, நிபந்தனை
விதிக்கப்பட்டுள்ளது.தனியார் பல்கலைகள், நிகர்நிலை பல்கலைகளாக, எந்த கட்டுப்பாடும் இன்றி செயல்பட்டு வந்தன. நீதிமன்ற உத்தரவு காரணமாக, அனைத்து தனியார் பல்கலைகளும், 'பல்கலை' என்ற பெயரை பயன்படுத்த, தடை விதிக்கப்பட்டுள்ளது. பல்கலைகளுக்கு நிகரான கல்லுாரியாகவே, அவை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளதாக, மத்திய மனிதவள அமைச்சகமும், பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி.,யும் அறிவித்தன.இதை தொடர்ந்து, அனைத்து தனியார் பல்கலைகளும், தங்கள் நிறுவன பெயரில் இருந்த, பல்கலை என்றவார்த்தையை நீக்கியுள்ளன. இதையடுத்து, அனைத்து நிகர்நிலை பல்கலைகளும், இன்ஜினியரிங், 'ஆர்கிடெக்ட், பார்மசி' மற்றும் மேலாண்மை படிப்பில் மாணவர்களை சேர்க்க, ஏ.ஐ.சி.டி.இ., ஒப்புதல் பெற வேண்டும் என, தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை, தனியார் பல்கலைகள், யு.ஜி.சி.,யின் அங்கீகாரத்தை மட்டுமே பெற்று, மாணவர்களை சேர்த்து வந்த நிலையில், இந்த புது கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.இதனால், தனியார் பல்கலைகளின் தன்னிச்சையான செயல்பாடுகளுக்கு, கடிவாளம் போடப்பட்டுள்ளது. ஏ.ஐ.சி.டி.இ., விதிகளின் படி, ஆய்வக வசதி, பேராசிரியர்கள், உள்கட்டமைப்புகள் இருந்தால் மட்டுமே, இன்ஜி., படிப்புக்கு, இனி, அங்கீகாரம் பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது