'மொபைல் - ஆதார்' இணைப்பது இனி எளிது!

மொபைல் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம். 2017 டிசம்பருக்குள் இணைக்காவிட்டால் இணைப்பு துண்டிக்கப்படும் என, மத்திய அரசு எச்சரித்தது.


அதனால், அந்த நிறுவனங்களின் வாடிக்கையாளர் மையங்களில், மக்கள் முட்டி மோதினர். இதையடுத்து, அதற்கான கெடு, வரும் மார்ச் இறுதி வரை நீட்டிக்கப்பட்டது.இந்த சூழலில், ஆதார் எண்ணுடன், வாடிக்கையாளரே, மொபைல் எண்ணை இணைக்கும் வகை யில், மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, '1456' என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை, மொபைலில் அழைத்தால், பதிவு செய்யப்பட்ட குரல் சேவை ஒலிக்கும்.

அதில், விருப்ப மொழியை தேர்ந்தெடுத்து, உங்கள் ஆதார் எண்ணை, 'டைப்' செய்ய வேண்டும். அது, உடனடியாக தனித்துவ அடையாள எண் ஆணையமான, யு.ஐ.டி.ஏ.ஐ.,க்கு அனுப்பப்படும்.அது, தகவல்களை உறுதி செய்ததும், 'ஒன் டைம் பாஸ்வேர்டு' மொபைல் போனுக்கு வரும். அந்த எண்ணை உடனே, 'டைப்' செய்து அனுப்பிய பின், இணைப்பை துண்டிக்கலாம். அடுத்த நிமிடத்தில், உங்கள் எண், ஆதாருடன் இணைத்ததை உறுதி செய்து, எஸ்.எம்.எஸ்., செய்தி வரும். சில நிமிடங்களில் இதைச் செய்து விடலாம்.